Skip to main content

நிஸ்ஸி




நேற்று காலை, வேலையிலும் பாட்டிலும் மூழ்கியிருந்தபோது பென் வந்து முதுகில் தட்டினான்.

“உன்னோடு வேலை செய்யக்கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியானது”

“என்ன நடந்தது?” என்றேன்.

“வேலை போய்விட்டது … இப்போதே வெளியேறுகிறேன். இந்த கக்காவை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது”

தூக்கிவாரிப்போட்டது. பென் என்னைவிட அதிகக்காலம் இங்கே வேலை செய்பவன். செய்தவன். வேலையை விட்டு ஆள்கள் போவதும் வருவதும் சகஜமான விசயம்தான். ஆனால் இந்த இக்கணத்தில் போட்டது போட்டதுபடியே அவனை வெளியேறச்சொன்னதுதான் அதிர்ச்சியாக இருந்தது. வார்த்தைகள் வரவில்லை.


“என்ன சொல்லவது என்று தெரியவில்லை … கொஞ்சநாள் கழித்து பியரோடு சந்தித்துப் பேசுவோம்”

அபத்தமாக இருந்தது. அவனை நான் இனிச் சந்திக்க முயற்சி எடுக்கப்போவதில்லை. அவனும் முயலப்போவதில்லை. எப்போதாவது எங்காவது தற்செயலாகச் சந்தித்தால்தான் உண்டு. அது அவனுக்கும் தெரியும்.

“நிச்சயமாக” என்று சொல்லிக்கொண்டே கட்டிப்பிடித்து, கை குலுக்கினான். அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அந்த நடுக்கத்துக்கு நிறையக்காரணங்கள். அண்மையில்தான் வீட்டு லோன் அவனுக்கு அப்புரூவ் ஆகியிருந்தது. மனைவி பிள்ளைத்தாய்ச்சி. வாகனம் வேறு விபத்தில் சிக்கி ரைட் ஓஃப் ஆகியிருந்தது. அன்றிரவு அவன் வீட்டில் நிலவப்போகும் நிர்சலனம் அப்போதே தாக்க ஆரம்பித்திருந்தது.

பென் பக்கத்து மேசை மரியஸையும் கட்டிப்பிடித்துவிட்டு விறுவிறுவென்று வாசற்கதவை நோக்கி நகர்ந்தான்.

“வா நிஸ்ஸி …எல்லோரிடமும் விடைபெற்றுக்கொள். நாங்கள் போகலாம்…”

எங்கோ சோஃபாவுக்குள் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்த நிஸ்ஸியும் எழுந்து நின்று உடலை உதறி, சில மயிர்களைத் தரையில் நீர்த்தது. கெல்லி ஓடிச்சென்று நிஸ்ஸியைத்தூக்கி ‘ஓ நிஸ்ஸி எங்களை விட்டுப்போகாதே’ என்று இறைஞ்சினாள். பின்னர் அதை இறக்கிவிட்டாள். பென்னும் நிஸ்ஸியும் வாசற்கதவை நோக்கிச் சென்றார்கள். கூடவே டேர்போவும் லூஸியும் அவர்களைப் பின் தொடர்ந்தன. டேர்போ எப்போதும் நிஸ்ஸியிடம் விளையாடிக்கொண்டேயிருக்கும். லூஸிக்கு அவன் நக்கற் போடுவதுண்டு. அவன் அவற்றைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சிவிட்டுக் கதவைச் சாத்தியபடி வெளியேறினான். நிஸ்ஸி அவனுக்கு முன்னேயே ஓடிவிட்டது.

அவர்கள் போனதும் அலுவலகம் எதுவுமே நிகழாததுபோல மீண்டும் இயங்க ஆரம்பித்தது. இந்த இடத்தில் மூன்று வருடமாக வேலை செய்தவன் இப்போது இல்லை என்பது எவருக்கும் அருட்டவில்லை. மூன்றுவருடமாக எங்களோடு வாலாட்டியபடி சுற்றிச்சுழன்ற ஒரு நாய் இனி இல்லை என்பதை ஏனைய நாய்களும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. நாய்களுக்கு எப்போதுமே சக நாய்கள்மீது அக்கறை இருந்ததாகச் சரித்திரமில்லை. கூட இருந்தால் விளையாடும். இல்லாவிட்டால் ஹூ கெயார்ஸ். தமக்குத் தீன் போடும் மனிதர்களுக்கு வாலாட்டி, வித்தை காட்டி, சாகசம் செய்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மாத்திரமே நாய்களுக்கு முக்கியம். நாய்களின் இருப்பும் அதன்வழியே. எப்போது நாய்கள் மனிதர்களைத் திருப்திப்படுத்தத் தவறுகின்றனவோ அப்போது அந்த இடத்தைத் தரித்திரம் பிடித்த பூனைகளும், பன்றிகளும் எடுத்துக்கொள்ளும். அது நாய்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.

டேர்போவும் லூஸியும் மீண்டுமொருமுறை விக்கிரமாதித்தன்போல என்னருகே வந்து நின்று வாலாட்டின. புதினமாக அம்மா நேற்று களி கிண்டித் தந்திருந்தார். நான் இரண்டு சிறு களி உருண்டைகளை அவற்றுக்கு உருட்டிப்போட்டேன். கபக்கென்று அவற்றை வாங்கிக்கொண்டு அவை அப்பால் சென்றன. சப்பிப்பார்த்து முடியாமல் எங்காவது கொண்டு சென்று கக்கித் தொலையட்டும்.

000

இன்று காலை எலார்ம் அடிக்கமுதலேயே தூக்கம் நாலரையளவில் கலைந்துவிட்டது. மழை பெய்துகொண்டிருந்தது. அலுவலகமும் மனிதர்களும் நாய்களும் இன்னமும் புத்தியில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். நான் ஏன் இப்போதெல்லாம் எழுதாமல் ஓய்ந்துபோனேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்படியே எழுதினாலும் அவை நாய்களின் கதைகளாகவே இருக்கின்றன. நாய்களே என் எண்ணத்தையும் சிந்தனையையும் ஆக்கிரமிக்கின்றன. வரவர மனிதர்கள் கண்ணுக்குத் தெரிவதே குறைவாக இருக்கிறது. வீதியில்போனால் நாய்கள்தான் தெரிகிறது. அவற்றைக் கூட்டி வரும் மனிதர்கள் வெறும் கோறையாகத்தான் தெரிகிறார்கள். அலுவலகத்திலும் அப்படியே. அவற்றை விடுத்து எழுதுவது என்பது கடினமாகிறது. பேசாமல் வீட்டிலும் ஒரு நாயை வாங்கி வளர்க்க ஆரம்பித்தால் என்ன என்று தோன்றுகிறது. அல்லது நாமே நாயாகிவிட்டாலுங்கூட காரியமில்லை.

அடுத்த வாசகர் சந்திப்பில் ‘சிதம்பர நினைவுகள்’ புத்தகம் பற்றி கலந்துரையாடவேண்டும் என்று ஞாபகம் வந்தது. வாசிக்கலாம் என்று புத்தகத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. நூலகத்தில், வரவேற்பறையில், கட்டிலுக்கடியில், கக்கூஸில், காரில் என்று எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. எவருக்காவது கொடுத்தோமோ என்றாலும், இந்த வீட்டுக்கு அப்படி யார் வந்து எதை எடுப்பார்கள்? ஒரு புத்தகம் எப்படி ஜஸ்ட் லைக் தட்டாகக் காணாமல் போகும்? அல்லது அது என்னிடமிருந்து ஒளிந்துகொண்டுவிட்டதா? சில புத்தகங்களும் நாய்களைப்போல வேலை காட்டும். வாலாட்டி வித்தை காட்டி சாகசம் செய்யும். நாங்கள் கணக்கெடுக்காவிட்டால் கணக்கெடுப்பவர்களை நோக்கிச்சென்று வாலாட்டும். ச்சே, மீண்டும் அதே நாய்ச்சிந்தனை. புத்தங்கள்கூட நாய்களாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. அயர்ச்சியாக இருந்தது. நூலகத்தில் வந்து அமர்ந்தேன். சுற்றிவர.

திரும்பவும் பென்னும் நிஸ்ஸியும்தான் ஞாபகம் வந்தார்கள். இந்நேரம் நிஸ்ஸி மழைக்குக் குறண்டியபடி தூங்கிக்கொண்டிருக்கும். பென்னுக்குத் தூக்கம் வந்திருக்குமா? அவன் நண்பிக்கு? இந்நேரம் குழந்தை வயிற்றில் இடித்தால் சிரிப்பாளா அல்லது கரிப்பாளா? பென் அடுத்தவருடம் திருமணம் முடிக்கப்போவதாகக்கூட கூறிக்கொண்டிருந்தான். பிள்ளை பிறந்ததும் திருமணம். நண்பிக்குப் புரபோஸ் பண்ணுவதற்காக வைர மோதிர டிசைனுகளை இணையத்தில் அடிக்கடி அவன் தேடிக்கொண்டிருப்பான். ஐயோ, அவனுக்கு இன்னொரு ஒழுங்கான வேலை கிடைக்கவேண்டுமே. நான் ஏன் அதைப்பற்றி அலட்டிக்கொண்டிருக்கிறேன்? இந்தக் கறுமம் பிடித்த ‘சிதம்பர நினைவுகள்’ எங்கு போய்த்தொலைந்தது? இப்போது நான் என்ன செய்வது? வேறு எதையாவது எடுத்து வாசிக்கலாம் என்று புத்தகவரிசைகளை எல்லாம் நோட்டம் விட்டேன். எல்லாமே ....

பின் தாவாரத்தில் மழை கேட்டுக்கேள்வியில்லாமல் தன்பாட்டுக்குக் கொட்டோ கொட்டென்று கொட்டியபடி பெருத்த ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தது.

எழுத ஆரம்பித்தேன்.

000

Comments


  1. //நான் ஏன் இப்போதெல்லாம் எழுதாமல் ஓய்ந்துபோனேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்படியே எழுதினாலும் அவை நாய்களின் கதைகளாகவே இருக்கின்றன. நாய்களே என் எண்ணத்தையும் சிந்தனையையும் ஆக்கிரமிக்கின்றன. வரவர மனிதர்கள் கண்ணுக்குத் தெரிவதே குறைவாக இருக்கிறது//
    .
    தொலைந்த படலையின் சாவியை கண்டவர்கள் உரியவரிடம் ஒப்படைக்கவும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...