கரப்பந்தாட்டத்தின் ‘over game’ வடிவம் தொழில்முறை விளையாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கு ஒழிந்து வந்தாலும் ஊர் மக்களிடையே அது மிகப்பிரபலமானது. நான் முதன்முதலாக இதனை விளையாடியது அத்தியடியில்தான். தொண்ணூறுகளில் அத்தியடிலிருந்த பிரியா வீட்டுக்குப் பின் வளவில் ஒரு பெருங்கூட்டமே அந்நாள்களில் கரப்பந்து விளையாட மாலை நேரங்களில் கூடிவிடும். பகல் முழுதும் வேலை செய்தவர்கள் எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒரு டீ குடித்துவிட்டு ஐந்து மணிக்குள்ளே திடலுக்கு வந்துவிடுவார்கள். அப்படி வருபவர்கள் பலரும் கரப்பந்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். அவர்கள் பந்தை உருட்டி, உருட்டி அடிக்கும் இலாவகத்தைப் பார்ப்பதே சுவாரசியமாக இருக்கும். விளையாட்டில் சுதி ஏறினால் தூஷணங்களும் பறக்கும். என்னைப்போன்ற பதின்மத்தவர்கள்தாம் அதிகம் வாங்கிக்கட்டுவார்கள். பந்துக்குப் பாயாவிட்டால், பந்து பறிக்க அடித்தால், மற்றவர் பந்துக்குப் பாய்ந்தால், ஏன் அவர்கள் பிழை விட்டால்கூட நமக்கே ஏச்சு விழும்.