Skip to main content

Posts

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை

சயந்தன் எழுதிய 'திசை ஒன்பது’ நாவலைப்பற்றி நான் எழுதிய கட்டுரை அகழ் இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. காலத்தில் நீளம் என்பது நாட்களில் அல்ல, அது நிகழ்வுகளால் ஆனது. ஒரு குறுகிய காலத்தில் நிறைய நிகழ்வுகளுக்குச் சாட்சி ஆகிறபோது அக்காலம் நீண்ட நெடியதாக நினைவில் பதிகிறது. இதுவே நீளமான கால இடைவெளியில் வெறுமனே துயில் கலைவது, கடுமையாக வேலையைச் செய்வது, தூங்குவதென்று வாழ்வு ஒடுங்கினால் அது குறுங்காலமாகவே நெஞ்சில் தங்கிவிடுகிறது. திசை ஒன்பது நாவலும் அத்தகைய அனுபவத்தையே பதிகிறது. பதினான்கு ஆண்டுகளில் ஏறத்தாழப் பத்து ஆண்டுகளை இளங்கோ உக்ரெய்னின் கீவ் நகரத்தில்தான் கழிக்கிறான். அங்கே அவனுடைய வாழ்வு ஒன்றும் பெருங் கொடுமை நிறைந்த தடுப்பு முகாம் வாழ்வும் அல்ல. நகரத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஹன்னாவோடு அவன் எளிமையான வாழ்வினையே வாழ்கிறான். ஒரு மூலைக்கடையைக் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறான். ஆனால் நாவலில் இப்பகுதி ஒரு தற்செயல்போல வந்துபோகிறது. இந்நாவல் ஒரு நதி எனில், இக்காலம் ஒரு சம தரையில் சலனங்கள் ஏதுமின்றி, எங்கோ எதிர்கொள்ளப்போகும் நீர்வீழ்ச்சியை ஆழ்மனதில் எதிர்பார்த்தபடியே மெதுவாக நகர்க...

நீளிரா

சோமிதரனுடைய இயக்கத்தில், பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய வெளியாகியிருக்கும் திரைப்படமான நீளிரா பற்றி நண்பர்கள் எழுதும் கட்டுரைகளை வாசிக்க ஆர்வமும் கொஞ்சம் குற்ற உணர்வுமே மேலிடுகிறது. நீளிராவை இங்கே மெல்பேர்னில் இரண்டே இரவுகள் மட்டும் ஒன்பதரை மணிக்குக் காட்சிப்படுத்தினார்கள். அந்தத் திரையரங்கும் ஒரு மணி நேரப் பயணத் தூரத்தில் இருக்கிறது. அதனால் அதனைத் திரையில் பார்த்து அனுபவிக்கும் சந்தர்ப்பம் கை நழுவிப்போய்விட்டது. இப்போது திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் மீண்டும் விநியோகஸ்தர்கள் மெல்பேர்னில் இதனைத் திரையிடக்கூடும். பார்க்கலாம். நீளிராவின் ஒளிப்பதிவாளரான பிரதீபனோடு எனக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு. பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் என்னைத் தொடர்புகொண்டு ‘பங்கர்’ புனைவுக்கட்டுரையை குறும்படமாக்கும் ஆர்வத்தைத் தெரிவித்தார். அவர் பூனே திரைப்படக்கல்லூரியில் அப்போது படித்துக்கொண்டிருந்தார் என்பதாக ஞாபகம். சில வாரங்களில் மிக அழகான திரைக்கதை ஒன்றையும் எழுதி அனுப்பினார். சில வசனங்களை யாழ்ப்பாண சொல்வழக்குக்கு மாற்றித்தரக் கேட்டார். சில காட்சிகளைப் படமாக்கியும் அனுப்பியதாக ஞாபகம...

ஜேன் ஓஸ்டினின் படைப்புலகம் - podcast

இந்த உரையாடலைச் செய்யும் எண்ணம் தற்செயலாகத்தான் உருவானது.   ஜேன் ஓஸ்டினின் நாவல்களைப் பற்றி கலா அக்காவும் நானும் நம்முடைய வாட்ஸப் குழுமத்தில் அடிக்கடி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருப்போம். ஒரு கட்டத்தில் அதையே பொட்காஸ்டாக செய்தால் என்ன என்று தோன்றிய எண்ணத்தின் விளைவுதான் இந்தக் காணொளி. ஜேனின் “Sense and Sensibility” என்ற நாவலைப் பிரதான இழையாகக்கொண்டு இந்த உரையாடலை நாம் அமைத்துள்ளோம்.   இந்நாவலைத் தழுவியே ராஜீவ்மேனன் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” என்ற திரைப்படத்தின் இயக்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜேனை வாசித்திருக்காவிட்டாலும் கண்டுகொண்டேன் திரைப்படத்தை விரும்பிப் பார்த்தவர் எனில் இந்த உரையாடலை உள்வாங்குவது உங்களுக்கும் எளிதாக அமையும் என்று நம்புகிறேன்.   இந்த உரையாடலைச் சாட்டாக வைத்து மறுபடியும் ஜேன் ஓஸ்டினின் மாந்தரோடு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. அதையே கலா அக்காவோடு இணைந்து செய்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. கலா அக்கா புத்தகங்களின் காதலி. புத்தகங்களை அவர் பேச ஆரம்பிக்கையிலேயே கூட இருக்கும் நமக்கும் ஒரு குழந்தையின் பரவசம் தொற்றிவிடுவதுண்டு....

மறை சாட்சி - சிறுகதை

தேவாலயத்தினுள்ளே மரியதாஸ் நுழையும்போது திருப்பலி ஆரம்பித்துவிட்டிருந்தது. அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்து இறைவாக்கினைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மரியதாஸ் ஓசை ஏதும் எழுப்பாமல் பின்னாலே ஒரு ஓரமாகப் போய் நின்றுகொண்டான். அவன் அப்படித் தயக்கத்தோடு நிற்பதைக் கவனித்த கடைசி வாங்கிலில் உட்காந்திருந்த பெண்மணி ஒருவர், அருகில் வந்தமருமாறு அவனுக்கு நகர்ந்து இடங்கொடுக்க, மரியதாஸ் அவரைப்பார்த்து சங்கடமாகப் புன்னகைத்தபடி மெதுவாக அங்கு சென்று உட்கார்ந்தான்.

தாயகம் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வெற்றிக்கிண்ணம்

கரப்பந்தாட்டத்தின் ‘over game’ வடிவம் தொழில்முறை விளையாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கு ஒழிந்து வந்தாலும் ஊர் மக்களிடையே அது மிகப்பிரபலமானது. நான் முதன்முதலாக இதனை விளையாடியது அத்தியடியில்தான். தொண்ணூறுகளில் அத்தியடிலிருந்த பிரியா வீட்டுக்குப் பின் வளவில் ஒரு பெருங்கூட்டமே அந்நாள்களில் கரப்பந்து விளையாட மாலை நேரங்களில் கூடிவிடும். பகல் முழுதும் வேலை செய்தவர்கள் எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒரு டீ குடித்துவிட்டு ஐந்து மணிக்குள்ளே திடலுக்கு வந்துவிடுவார்கள். அப்படி வருபவர்கள் பலரும் கரப்பந்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். அவர்கள் பந்தை உருட்டி, உருட்டி அடிக்கும் இலாவகத்தைப் பார்ப்பதே சுவாரசியமாக இருக்கும். விளையாட்டில் சுதி ஏறினால் தூஷணங்களும் பறக்கும். என்னைப்போன்ற பதின்மத்தவர்கள்தாம் அதிகம் வாங்கிக்கட்டுவார்கள். பந்துக்குப் பாயாவிட்டால், பந்து பறிக்க அடித்தால், மற்றவர் பந்துக்குப் பாய்ந்தால், ஏன் அவர்கள் பிழை விட்டால்கூட நமக்கே ஏச்சு விழும்.

புலம்பெயர் எரிபொருள் கியூ

இன்று வீட்டிலிருந்துதான் வேலை. அடுத்த அரை மணி நேரத்தில் ஆரம்பிக்க இருக்கும் அலுவலகக் கூட்டத்துக்கான தயார்ப்படுத்தல்களைச் செய்துகொண்டிருந்தேன். புதிய திட்ட வரைபு ஒன்று அது. நான்தான் அதனை அறிமுகம் செய்து உரையாடவேண்டும். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பிரதானத் தொழில்நுட்ப இயக்குநர், சைபர் பாதுகாப்பு நிபுணர் எனப் பல முடிவெடுக்கும் புள்ளிகள் பங்கெடுக்கும் கூட்டம் அது. காலையில் குடித்த கோப்பி வயிற்றைக் கலக்கிக்கொண்டிருந்தது.

முரண் நயத்தல்

உங்களை இங்கே எதிர்பார்க்கவில்லை. நேற்றைய நிகழ்வில் மொத்தமாக மூன்று பேர் இந்தக் கூற்றை என்னிடம் சொன்னார்கள். அது கம்பன் கழகம் நடத்திய ஞானவேள்வி எனும் நிகழ்வு. ஆண்டுதோறும் இந்த நிகழ்வை குமாரதாசன் அண்ணா மெய்யும் மடியும் வருந்த மேடையேற்றிக்கொண்டிருக்கிறார். நானும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் இந்நிகழ்வுக்குச் செல்லும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் யாரேனும் சிலர் அதிசயமாக இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்பதுண்டு. இத்தனைக்கும் கேட்டவர்கள் அத்தனை பேரும் ஓரளவுக்கு எனக்கு நெருக்கமானவர்களும்கூட. ஆனாலும் என்னைக் கண்டவுடன் சிறு திகைப்பு அவர்களது கண்களில் ஒளிர்ந்து மறையும். ஆச்சரியம் விளையும். வாய் அறியாது சொற்களை உதிர்த்துவிடும்.