Skip to main content

என் கொல்லைப்புறத்து காதலிகள் - புதிய தொடர் அறிமுகம்!



அடுத்தடுத்து எழுதாதே, கொஞ்சம் இடைவெளி விட்டால் தான் நாங்களும் படிவோம், நீயும் படிவாய் என்றான் நண்பன் ஒருவன். எழுதுவது என்பது ஒருவித ecstasy மனநிலையை உருவாக்கும் போல, ஒரு கட்டத்தில் நாம் நினைத்தாலும் நிறுத்தமுடியாது. எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் போலத்தோன்றும். பின்னர் ஒரு விதமாக படிந்து அடங்கிவிடும். சும்மா சொல்லப்போனால் இதுவும் ஒருவித orgasm தான். ஜெயகாந்தனுக்கும் அது "இன்னும் ஒரு பெண்ணின் கதை" யில் நிகழ்ந்தது என்று சொல்லலாமா?, சப்ஜெக்டிவ் தான். என்ன சிலர் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி என்று தெரியவில்லை. ஜெயமோகனின் எழுதும் ரேட் என்னை ஆச்சரியப்படுத்தும். அதிலும் ஒரு perfection இருக்கிறது இல்லையா? சொல்லும் கருத்தை விட்டுவிடுங்கள். ஜாக்கி சேகர் எழுதுவது வருடத்துக்கு சராசரி 275 பதிவுகள். எப்படி முடிகிறது? எது உந்துகிறது? எழுதுவதற்கும் வயாக்ரா ஏதும் இருக்கிறதா என்ன? மீண்டும் மீண்டும் அவர்களுக்கு substance கிடைத்துக்கொண்டே இருப்பது மேலும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். தேடல் தான்.



மற்றவன் அந்தரங்கம் என்றால் குழல் புட்டு தொண்டைக்குள் போவது தெரியாமல் ரசித்துக்கொண்டிருப்போம். அதுவும் ஒரு கிளர்ச்சி தான். இதற்குள் சிக்கி சின்னாபின்னப்படுவது நடிகர் கமல், ஐயோ பாவம். தமிழ் திரையுலகில் நடிகராகவும் இருந்து ஒரு சிந்தனையாளராகவும் இருப்பது ஒரு கிரிமினல் குற்றம். அதை கமல் இன்னமும் விரும்பி செய்வது ஆச்சரியமே. நம்மில் பலர் எவற்றையுமே முன்முடிபு செய்தபின்னரே வாசிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம். இவன் இப்படித்தான் என்றும் இது இப்படித்தான் என்றும் தீர்மானித்துவிட்டால் பின் அவன் எதை சொன்னாலும் அது எதுவென்றாலும் அவ்வளவு தான். நமக்கு தெரியாததா என்ன?!


இன்னொருபக்கம் நம்முடைய அந்தரங்ககளை பகிர்வதிலும் எமக்கு ஒரு அலாதியான பிரியம் இல்லையா? நான் மூன்று வயதில் அம்மா சேலையில் தொங்கியத்தை பார்த்து நான்கு பெண்கள் so cute என்று Facebook இல் சொன்னால் அது பிறவிப்பயன். இரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை எத்தனை likes என்று check பண்ணிக்கொண்டு இருப்போம், இதன் நீட்சி தான் video பகிர்வும் twitter உம், எம்மைப் பலர் அவதானிப்பதை ரசிக்கிறோம். இன்னொருவன் போடும் ஒரு மொக்கை status க்கு கிடைக்கும் comments எரிச்சல் வர வைக்கிறது. அவன் எங்கே இருந்து அதை களவாடினான் என்று கூகுளில் தொலைவோம். இதெல்லாமே ஒரு “survival of the fittest” என்ற விலங்கு கூறின் butterfly effect நீட்சிகள் தாம்.


தொடருக்கு வருவோம். யார் அந்த கொல்லைப்புறத்து காதலிகள். அது தான் கொல்லைப்புறம் என்று சொல்லிவிட்டேனே! நீங்களே பின்னாலே வந்து எட்டிப்பார்த்தால் தான் உண்டு. ஆனால் சிலரை முன்னே அழைத்து வரப்போகிறேன். வாரம் வாரம், ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு காதலிகள் வருவார்கள். தீரும்வரை அல்லது தீர்மானிக்கும் வரை !!!

ddd

 “எனக்கொரு காதலி இருக்கின்றாள், அவள் எழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்!”

--------------------------- முதல் காதல் வரும் ஞாயிறு --------------------------


Comments

  1. ஹாய் அண்ணா,
    யார் யார்ற வாழ்க்கையை எல்லாம் இழுக்கபோறீங்களோ தெரியல.. எல்லோருக்கும் பீதியை கிளப்பி விட்டுடீங்க :)

    //
    தீரும்வரை
    //

    தீர்ந்து விடும் என்று நம்பிக்கை உள்ளதா? :)

    ReplyDelete
  2. Extract from the post :

    நம்மில் பலர் எவற்றையுமே முன்முடிபு செய்தபின்னரே வாசிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம். இவன் இப்படித்தான் என்றும் இது இப்படித்தான் என்றும் தீர்மானித்துவிட்டால் பின் அவன் எதை சொன்னாலும் அது எதுவென்றாலும் அவ்வளவு தான். நமக்கு தெரியாததா என்ன?!

    ;) ;)

    ReplyDelete
  3. புத்தகத்தில் படித்து முடிந்து நிறைய நாட்களாகி விட்ட பின்.... இப்போது கிண்டிலில் மீண்டும் வேண்டி படிக்கின்றேன். காதலிகள் எப்போதும் சலிப்பில்லாத ஆச்சரியங்களே.......ஆராதிக்க தெரிந்த ஆடவனின் அரவணைப்பில் இருக்கும் வரை......
    அடுத்த பாகம் எதிர்பார்க்கலாமா என்று கேட்கமாட்டேன் ஏனென்றால் நிச்சயமாக வரும் என்று தெரியும் . மிகவும் ஆவலுடன் இல்லை பொறாமையுடன் காத்திருக்கும் ஒரு மழைக்காக ஏங்கும் கள்ளிச்செடி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”