ஆனையிறவை அண்டிய ஒரு ஒலைக்குடிசை அது. கரைவலை போட்டு மீன்பிடிக்கும் ஏழை மீனவகுடும்பத்தின் வாடிவீடு. ஒரே அறை, நடுவிலே ஒரு பாய் தொங்கும். அந்தப்பக்கம் படுக்கை, இந்தப்பக்கம் சமையல், குழந்தைகள் படுக்க என்று இடம். சமையலறை வேறும்பேச்சுக்கே ஒழிய அங்கே இருந்தது என்னவோ இரண்டு சாப்பாட்டு தட்டங்கள்,நெளிந்த அலுமினிய டம்ளர்கள். இரண்டு பானைகள். ஒரு பானையில் குடி தண்ணீர். மற்றய பானையில் தான் சோறு காய்ச்சுவது. சண்டை நடக்காத பின்னேர் வேளைகளில் அந்த மீனவன் பயத்தோடு கரைவலை போட்டு பிடிக்கும் குட்டி குட்டி மீன்களில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொரிக்கவோ, குழம்பு வைக்கவோ வசதியில்லை. இது போதாது என்று இருந்த ஒரே ஒரு ஆட்டைக்கூட சீக்கிய இந்தியன் ஆர்மிக்காரன் பறித்துக்கொண்டு போய்விட்டான், இறைச்சிக்கு.
இப்படியான சூழ்நிலையிலேயே அனிதாவும் சியாமும் அந்த வீட்டுக்குள் நுழைகிறார்கள். இந்திய இராணுவத்துக்கு தெரியாமல் களவாக யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனை பேட்டி எடுக்கும் உயிரை பணயம் வைக்கும் பயணம். அன்றிரவு இந்திய இராணுவத்தின் நடமாட்டம் அதிகம் என்று அவர்களை புலிகள் அங்கேயே தங்க வைக்கிறார்கள். சாப்பாடு? மீனவனின் மனைவி, இருந்த காற்சுண்டு அரிசிக்குள் குட்டி கிளாக்கன் மீன் இரண்டையும், பின்பத்தியில் கிடைத்த நான்கைந்து கீரைத்தண்டையும் ஆய்ந்து போட்டு ஒரேயடியாக சோறாக்கி கொடுக்கிறாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட, அந்த பெண்ணோ அன்றிரவு பட்டினி.
The ability to share often decreases with rising wealth என்று தன்னோடு அந்த மீனவ மனைவியை ஒப்பிட்டு அனிதா எழுதும் பத்தி பல கற்களை எம்முள்ளே நகர்த்தும். யாரென்றே தெரியாமல் வீட்டுக்குள் அழைத்து, சாப்பாடு போட்டு இரண்டு வருடங்கள் பெற்றபிள்ளைகள் போல என்னையும் அக்காவையும் கொண்டாடிய வட்டக்கச்சி குடும்பம் கண்முன்னே வந்து கனக்கும். இப்படி நூலின் ஒவ்வொரு வரிகளும் பதைபதைக்கவைத்து ஆயாசப்படுத்தி ஆணவப்படுத்தி அப்புறம் எம்மை ஒரு நிலைப்படுத்தி .. Thanks a lot அனிதா.
“Island of Blood” என்ற நூலுக்கு அறிமுகம் தேவையில்லை. ஈழத்து போராட்டத்தில் சிறிதேனும் ஆர்வம் கொண்ட எவருமே படித்திருக்ககூடிய புத்தகம் தான் இது. பன்னிரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகிய புத்தகம். கொஞ்சநாளிலேயே யாரோ ஒரு புண்ணியவான் அதை தமிழில் மொழிபெயர்த்து வீரகேசரியிலோ, தினக்குரலிலோ எழுதி வாசித்திருந்தேன். பின்னாளில் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் ஒருமுறை கண்ணில் மாட்டியது. அந்த புத்தகத்தை பெய்ட்டாக வைத்து யார் வாசிக்கிறாங்கள் எண்டு கண்டுபிடிச்சு உள்ள போடப்போறாங்களோ என்ற பயத்தையும் ஒதுக்கிவிட்டு வாசித்து முடித்தபுத்தகம். பின்னர் இங்கே வந்து ஈபேயில் வாங்கி கட்டியணைத்துக்கொண்டு வாசித்த, எ ஜெம்.
அனிதாபிரதாப் எங்கள் போராட்டம் எந்த நிலையை அடைய போகிறது என்ற ஊகத்தை அப்போதே சொல்லிவிட்டார். பிரபாகரனுடனான சந்திப்பு ஒன்றில் அவர் சொல்லிய வசனம் இது.
“If eelam finally dawned, expatriate Tamils would rejoice but by then, most Tamils in their homeland would be six feet under”
ஈழப்போராட்டத்தின் நிகழ்வுகளை பக்கச்சார்பில்லாமல் பதிந்த, நான் வாசித்த ஏனைய இரு புத்தகங்களான “முறிந்த பனை” மற்றும் “The Cage” இற்கும் “Island of Blood” க்கும் உள்ள வித்தியாசம், அனிதா ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட தமிழர் சார்பில் இருந்து உணர்வுபூர்வமாக இதை பதிவு செய்தது தான். ரஜனியின் எழுத்தில் தகவல்களின் கோப்புகளே முக்கியத்துவம் பெறுகிறது. கோர்டன் விஸ் கொஞ்சம் சாட்சியமாக பயன்படக்கூடிய தகவல்களை ஊர்ஜிதப்படுத்தி எழுதியிருப்பார். அனிதா இருபதாண்டு ஈழத்தோடு தான் கண்டு கேட்டு உய்த்து அறிந்ததை பிறழாமல் எழுதியிருக்கிறார்.
அனிதா என்ற ஊடகவியலாளரின் ஆளுமை புத்தகம் முழுதும் விரவிக்கிடக்கிறது. ஒரு பெண், அதுவும் துணிச்சல் நிறைந்த பெண், அவளுக்கே உரிய உணர்வுகளுடன் போராட்டங்களை பதிவு செய்யும்போது அந்த நூலுக்கு இரத்தமும் சதையும் உணர்வும் தானாகவே வந்துவிடுகிறது. நான் மிகவும் கொண்டாடும் ரசிக்கும் சமகாலத்து பெண் ஐடல்களான ஜூஹும்பா லாகிரி, மிச்சல் ஒபாமா வரிசையில் எப்போதுமே முன்னணியில் இருக்கும் லெஜெண்டரி ரிப்போர்ட்டர் இந்த அனிதா பிரதாப். தலை சாய்த்து வணங்குகிறேன்.
"Island of Blood" ஐ வாசிக்கவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் மனிதனுக்கும் இருக்கிறது.
Comments
Post a Comment