Skip to main content

அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது


நேற்று இடம்பெற்ற “அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது” ஒன்றுகூடல் மிகுந்த மனத்திருப்தியோடு நடந்து முடிந்தது. வாசிப்பின் உந்துதலில் தூரத்தையும் பொருட்படுத்தாது பன்னிரண்டுபேர் இணைந்திருந்தார்கள். எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இருநூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் சம்மணமிட்டு, சுற்றி உட்கார்ந்து வாசிப்பு அனுபவங்களைப் பகிர்தல் என்பது ஒரு நீண்டகாலக் கனவு. சாத்தியமாக்கியதற்கு அனைவருக்கும் நன்றிகள்.

போவதே தெரியாமல் இரண்டரை மணிநேரம் நீடித்த இப்பயணத்தை முருகபூபதி தன்னோடு அசோகமித்திரனுக்கு இருந்த உறவையும், அவர் கைலாசபதி காலத்தில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களையும் பகிர்ந்து ஆரம்பித்துவைத்தார். அதன்பிறகு அசோகமித்திரனின் "பிரயாணம்" சிறுகதை வாசிக்கப்பட்டது. அது முடிய அனைவரும் அசோகமித்திரனின் படைப்புகள் பற்றிப் பேசலானோம். பிராயணத்தில் ஆரம்பித்து, அப்பாவின் சிநேகிதர், புலிக்கலைஞன், ரிக்சா(!), எலி, முறைப்பெண், அம்மாவுக்கு ஒருநாள், ஐநூறு கோப்பை தட்டுகள், தண்ணீர் என்று அவரின் படைப்புகள் பலவற்றைப்பற்றிப் பேசினோம்.

எல்லோரும் திரும்பிப்போனபின்னர் வரவேற்பறையில் கிடந்த “தண்ணீர்” நாவலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் அட்டைப்படத்து வறண்ட பாலை நிலத்தில் ஈரம் கசிந்ததுபோலத் தோன்றியது. இதைவிட வேறென்ன வேண்டும்?












Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”