Skip to main content

அங்காடிப் பெண்



இரவு உணவுக்கு நண்பர்கள் வருவதாக இருந்தது.

வீடு படு குப்பையாக இருந்தது. சமையல் சாமான்கள் எல்லாம் தீர்ந்திருந்தது. வாங்கவேண்டும். சமையலறை சின்ங் முழுதும் ஒருவாரத்துப் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மினுக்கவேண்டும். வேலைக்கு லீவு போடலாம் என்றால் அன்றைக்கு என்று பார்த்து ஒரு ரிலீஸ் இருந்தது. போயே தீரவேண்டும். அவளும் பிஸி.

காலை ஐந்தரைக்கே அன்றைய நாள் மிரட்ட ஆரம்பித்தது. மிக நீண்ட நாளுக்கான காலை மிக அலுப்புடனேயே விடியும். அன்றும் அப்படித்தான். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சற்றுநேரம் தூங்கினால் என்ன என்று இருந்தது. முடியவில்லை. தேநீரை ஊற்றி ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். “மாஸ்டர் அண்ட் மாகரிட்டா” நாவல் அலுப்படித்தது. கடவுள் தத்துவ விசாரங்கள் எல்லாம் இப்போது பயங்கரமாக அலுப்படிக்கின்றன. இருக்கு இல்லை என்ற விவாதங்கள் வெறும் வெற்று. இருக்கு என்றால் இருக்கு. இல்லை என்றால் இல்லை. இரண்டாலும் எந்தப்பயனும் இல்லை என்பதே உண்மை. புத்தக வாசிப்பு மனிதர்களின் இயல்புகளைப் பெரும்பாலும் மாற்றியமைப்பதில்லை. அவை கொடுக்கும் விசுவரூப தருணங்களின் நீளம் மிகக்குறைவு. அதிகம் போனால் சேம் பின்ஞ் சொல்ல வைக்கும். அவ்வளவுதான். நமக்குள் உள்ளதை நமக்கே நினைவுபடுத்தும் வேலையைத்தான் புத்தகங்கள் செய்கின்றன. மற்றும்படி பெரிதாக ஒன்றையும் அவை வெட்டி விழுத்துவதில்லை. அதுவும் கூட்டப்படாத வீட்டில், சமையலுக்குச் சாமான்கள் வாங்கவில்லையே என்ற டென்ஷனில் தத்துவவிசாரங்கள் ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லாதவை. மூடிவைத்துவிட்டேன்.

பாட்டைப் பிளே பண்ணிவிட்டு ஒவ்வொரு பாத்திரமாகக் கழுவ ஆரம்பித்தேன். “நான் பகல் இரவு. நீ கதிர் நிலவு” என்று நீத்தி மோகன் ஆரம்பித்தார். இசை அனிருத். அனிருத் இசை பற்றிப் பெரிதான அபிப்பிராயம் ஏதும் எனக்கு இதுவரை இருந்ததில்லை. ஆனால் இந்தப்பாட்டோடு அவர்மீதான மதிப்பு மிக மிக உயர்ந்துவிட்டது. நூறு வருடங்களுக்குப் பிறகும் அனிருத் இந்தப்பாட்டினூடாக நிலைப்பார் என்று தோன்றுகிறது. டிவைன். "நீ வேண்டுமே" என்று பாடும்போது நெகிழாதவர் ஒருவர்தன்னும் உண்டோ?

ஏழு மணிக்குப் பல்பொருள் அங்காடி திறக்கையில் அவசரமாக உள்ளே நுழைந்தேன். குறித்து வைத்திருந்த சாமான்களை எல்லாம் மடமடவென்று எடுத்துப்போட்டபடி கவுண்டருக்குத் திரும்புகையில் தள்ளுவண்டி நிறைந்திருந்தது. இங்கே பல்பொருள் அங்காடிகளில் தானியங்கிக் கவுண்டர்கள் உண்டு. வாடிக்கையாளர்களே பொருட்களை ஸ்கான் பண்ணி, காசையும் கொடுத்துவிட்டுப் போகலாம். எனக்கு ஒவ்வொன்றாக ஸ்கான் பண்ணிப் பையில் போடப் பஞ்சியாக இருந்தது. தானியங்கியைத் தவிர்த்து சாதாரணக் கவுண்டருக்குப் போனேன்.

“ஹவ் ஆர் யூ டுடே?”

வழமையாக இந்தக்கேள்வி இயந்திரத்தனமானதாக இருக்கும். நானும் “குட் தாங்க்ஸ். யுவர்செல்ப்?” என்று இயந்திரத்தனமாக பதிலளித்துவிட்டு பொருட்களைப் பரப்புவேன். ஆனால் இந்தக்குரலில் ஒரு சிநேகம் இருந்தது. நிமிர்ந்து கவுண்டரில் நின்றவரை வடிவாகப் பார்த்தேன். அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண்மணி. அவர் சிரிக்கும்போது கண், மூக்கு, நெற்றி, கன்னம், காது என்று எல்லாமே சேர்ந்து சிரித்தது. நானும் சிரித்துவிட்டு “ஹவ் ஆர் யூ?” என்றேன். சிநேகமாக. “இஸின்ட் இட் எ லவ்லி டே?” என்றார். அத்தோடு நிறுத்தவில்லை. “இவ்வளவு பொருட்களை காலையிலேயே வாங்குகிறீர்களே, இன்று வீட்டிலே என்ன சிறப்பு?” என்று கேட்டார்.

“நண்பர்கள் வருகிறார்கள்” என்றேன்.

“ஓ லவ்லி. சிறப்பாக ஏதும் சமைக்கிறீர்களா?”

“சிறப்பாக என்று சொல்ல முடியாது. பாஸ்டா செய்கிறோம். டேசெர்ட்டுக்கு அப்பிள் பை செய்யலாம் என்று ஒரு ஐடியா.”

“அற்புதம். உங்கள் ரெசிப்பியின் ரகசியம் என்ன?”

“ரகசியத்தை எப்படி வெளியே சொல்வது? தவிர எனக்கு பையை சாப்பிட மாத்திரமே தெரியும். மனைவிதான் செய்யவேண்டும்”

நான் பகிடி விட்டதாக நினைக்கவில்லை. ஆனால் அவர் விழுந்து விழுந்து சிரித்தார். கூடவே அந்தவழியால் சென்ற இன்னொரு பணியாளரை அழைத்துச்சொன்னார்.

“நான்ஸி. திஸ் ஜென்டில்மென் பமிலி இஸ் மேக்கிங் அன் அப்பிள் பை டுடே”

எனக்கு இப்போது சங்கடமாகப் போய்விட்டது. இருவரையும் இரவு உணவுக்கு வீட்டுக்கு வரச்சொன்னேன். அவர்களும் வருவதாகச் சொன்னார்கள். “வி வில் பலோ த ஸ்மெல்” யாருக்காக இல்லாவிட்டாலும் அவருக்காகவேனும் அந்த அப்பிள் பை அன்று சரியாக அமையவேண்டும் என்று தோன்றியது. பணம் செலுத்தி பில் வாங்கும்வரையிலும் அவர் பேசிக்கொண்டேயிருந்தார். “ஸீ யூ” சொல்லி விடைபெற்று காரில் வந்து ஏறிய பின்னரும் என் முகத்தில் சிரிப்பு மறையாமலிருந்தது. காது, மூக்கு, கன்னம், நெற்றி எல்லாம் சேர்ந்து சிரிக்கும் சிரிப்பு. அன்று முழுதும் அந்தச்சிரிப்பு என் முகத்திலிருந்து மறையவேயில்லை.

காலை ஏழு மணிக்கு அன்றைய நாளின் அத்தனை டென்சனையும் முகத்தில் தாங்கியபடி வந்தவனை அந்தப்பெண்மணியால் எப்படி மாற்றியமைக்க முடிந்தது? என்னுடைய காலைப்பொழுது எப்படி அவ்வளவு இனிமையாக மாறிப்போனது? அன்று நான் தானியங்கி எந்திரத்தில் சாமான்களை ஸ்கான் பண்ணியிருந்தால் அந்தச் சிரிப்பை இழந்திருப்பேன். அந்த நாளின் கொண்டாட்டத்தையும் தொலைத்திருப்பேன். அன்று மட்டும் எத்தனை மனிதர்களின் காலையை அந்தப்பெண்மணி இனிமையாக்கியிருப்பார்? ச்சைக். அவருடைய பெயரைக்கூட கேட்கவில்லை நான்.

மிகச்சிறந்த இலக்கியங்கள் எல்லாம் இப்படி நம்மைச் சுற்றி நடமாடிக்கொண்டிருக்கையில் வீணாகப் புத்தகங்களுக்குள் ஏன் மூழ்கிக்கிடக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

Comments

  1. //அவர் சிரிக்கும்போது கண், மூக்கு, நெற்றி, கன்னம், காது என்று எல்லாமே சேர்ந்து சிரித்தது//
    இந்த விபரிப்பை உங்கள் பதிவுகளில் அடிக்கடி பார்க்கின்றேன்

    கண்றாவி ஆப்பிள் பைக்கு இவ்வளவு பில்டப்பா அதுவும் அதிண்ட டேஸ்டும்

    //மிகச்சிறந்த இலக்கியங்கள் எல்லாம் இப்படி நம்மைச் சுற்றி நடமாடிக்கொண்டிருக்கையில் வீணாகப் புத்தகங்களுக்குள் ஏன் மூழ்கிக்கிடக்கவேண்டும் என்று தோன்றுகிறது.//
    இவற்றை எல்லாம் இலக்கியங்களாக எண்ண வைத்தது எதுவாம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...