Skip to main content

நாம் தமிழர்

ஒரு தமிழ்நாட்டுத் தமிழரோடு தேநீர் குடிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது.

பேச்சுவாக்கில் “ஈழத்தமிழர்களுக்கு என்று என்ன அடையாளம் இருக்கிறது? மொழி முதல் கலாச்சாரம், உணவுவரை எல்லாமே எங்களிடமிருந்து வந்ததுதானே?” என்று நெல்லிச்சாக்கைத் தெரியாத்தனமாக அவிழ்த்துவிட்டார்.

எனக்கு அன்றைக்கு என்ன மூடு இருந்ததோ தெரியவில்லை. அவருக்குப் பதிலளிக்கவேண்டும்போலத் தோன்றியது. ஆரம்பித்தேன்.

மொழி முதல் கலாச்சாரம்வரை நமக்கு ஏன் அது இந்தியாவிலிருந்து வந்தது என்று கூறவேண்டும்? ஈழத்தில் பலநூற்றாண்டுகளாக, கிறிஸ்து பிறப்புக்கு முன்னர் இருந்தே மனித நாகரிகம் இருந்தமைக்கான சான்றுகள் இருக்கிறது. அவர்கள் வேறு எந்த மொழியை விடவும் தமிழைப் பேசியிருப்பதற்கே சாத்தியங்களே அதிகம் என்பது ஷோபாசக்தியின் உள்ளங்கை கிரனைட். அப்படியிருக்க, என் பாட்டர், முப்பாட்டர் எல்லாம் தமிழையே பேசியிருக்க, எதற்காக என் மொழி இன்னோரிடத்திலிருந்து வந்தது என்று சொல்லவேண்டும்? எப்படி நாகபட்டினத்து மக்கள் தமிழ் பேசினார்களோ, எப்படி கோவை மக்கள் தமிழர்களோ, அதுபோலத்தான் ஈழத்தவர்களுக்கும். ஆங்கிலமொழி இங்கிலாந்திலிருந்துதான் ஸ்கொட்லாந்துக்கு வந்தது என்று ஒரு ஸ்கொட்டிஷ்காரரிடம் சொல்லிப்பாருங்கள். அறை விழும். அதிகம் ஏன், நெல்லைக்காரரிடம் போய், "உம் தமிழ் மதுரையிலிருந்து வந்ததுதானே" என்று சும்மா சொல்லிப்பாருங்களேன். அரிவாள்தான்.

நண்பர் டென்சனாகிவிட்டார். “அப்படி என்றால் கம்பரையும், பாரதியையும் உரிமை கோருவீர்களா?” என்றார்.

இதில் உரிமை கோருவதற்கு என்ன இருக்கிறது? கம்பனும் பாரதியும் உலகப் பொதுமைகள். நாமெல்லாம் அவர்களை உரிமைகோரி அசிங்கப்படுத்தத்தேவையில்லை. ஆனால் ஒரு சென்னைக்காரருக்கு, ஒரு தஞ்சாவூர்க்காரருக்கு, ஒரு நெல்லைக்காரருக்கு பாரதிமேல் இருக்கும் உரிமையளவு எனக்கும் உண்டு. பிரிட்டிஷ்காரர் திராவிடப் பிராந்தியத்தின் பெரும்பகுதியை தம் வசதிக்காக வட இந்தியாவுடன் சேர்த்ததற்காக எமக்கு உரிமையான சங்க இலக்கியங்களை நாம் ஏன் காவு கொடுக்கவேண்டும்? உங்களுக்கு உள்ள அதேயளவு உரிமை எமக்கும் உண்டு.

“இல்லையே, உங்களிடம் கேரளப்பண்புகளும் இருக்கின்றனவே?”

இருக்கட்டுமே. அது நல்லதுக்குத்தான். எங்களுக்கு தூய உயிரி என்று எதுவும் இல்லை. கலிங்கர்கள், அலாவுதீன் கிஞ்சி காலத்திலேயே கலப்பு என்பது திராவிடத்தில் ஆரம்பித்துவிட்டது. டி.என்.ஏ அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு சிங்களவர்களோடே அதிகத் தொடர்பு என்கிறது ஒரு ஆய்வு. இதற்கு ஆய்வு எல்லாம் தேவையே இல்லை. வந்தது எழுநூறுபேர்தானே? மற்றவர் எல்லாம் இங்கிருந்த திராவிடர்கள்தானே. இன்னுஞ் சொல்லப்போனால் சிங்களவர்களுக்கு சங்க இலக்கியங்களின் மீதுள்ள உரிமைகூட குறைவானதல்ல எனலாம். மொழி வேறானதால் உரிமைகள் அகன்றுவிடுமா என்ன? அப்புறம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்று அடுத்தடுத்து ஆக்கிரமிப்புகள். உலகமெங்குமே இதே நிலைதான். எல்லா உயிரிகளுக்கும் இதே நிலைதான். கூர்ப்பின் அடிப்படையே இதுதானே. தூய உயிரிகள் நீண்டகாலம் நிலைக்கா. எவராவது தம்மை தூய இரத்தம், தூய சாதிக்காரர், தூய தமிழர் என்று தற்புகழ்ந்தால் அவர் வீட்டில் பெண்ணோ ஆணோ எடுக்காதீர்கள். நோய் வந்து பரம்பரை விரைவிலேயே அழிந்துவிடும். அந்தக் குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு மேலே நின்று பிடிக்காது. கூர்ப்புக்கு அப்படியான இனங்கள் என்றாலே சத்துரு.

“எல்லோருக்குமே உரித்து உள்ளதென்றால் என்றால் எதற்காக உரிமைப்போராட்டம்?”

உரிமைப்போராட்டம் வரலாற்றுக்காரணங்களுக்காக உருவாக்கப்படுவதில்லை. உரிமைகள் மறுக்கப்படும்போது கூடவே உரிமைப்போராட்டமும் கிளம்புகிறது. இப்போதுகூட நான் சும்மாதான் இருந்தேன். எப்போது எனக்கு என் தமிழ்மீது உரிமை இல்லை என்ற வகையில் கூறினீர்களோ அப்போதே இந்த விளக்கத்தை நான் கொடுக்கவேண்டிவந்தது. தவிர, எந்தவித மொழி, வரலாற்று, கலாச்சார பின்புலம் இல்லை என்றாலும்கூட, ஒரு இனத்துக்கோ, குழுவுக்கோ அல்லது தனிமனிதருக்கோ உரிமை மறுக்கப்படுமேயானால் அங்கே போராட்டம் கிளர்ந்தெழும். அது இயல்பு. அதுதான் வரலாறு முழுதும் இடம்பெற்று வருகிறது. சொல்லப்போனால் அதுதான் அட்டன்பரோவின் காணொலிகளிலும் தினமும் இடம்பெறுகிறது. எடுப்பதும் மறிப்பதும் பறிப்பதும் எழுவதும் வீழ்வதும் உயிரிகள் இயல்பு.

அவ்வளவுதான். தேநீர் இடைவேளை நிறைவுற்றது.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...