Skip to main content

சொல்லவேண்டிய கதைகள்


எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லெ. முருகபூபதி எழுதிய “சொல்லவேண்டிய கதைகள்” என்கின்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை இடம்பெற இருக்கிறது.

முருகபூபதி நிறைய அனுபவங்களைச் சுமந்து திரிபவர். அவர் அவற்றைச் சொல்லும்போது ஒருவித பத்திரிகைத் துணுக்குத்தனம் தொனிக்கும். பெரும்பாலும் புனைவு கலக்காமல், முன்முடிபுகள் சேர்க்காமல் செய்தியாகவே அனுபவங்களை முருகபூபதி சொல்வார். ஒரு அனுபவத்தைப் பகிரும்போது மூலச் செய்தி என்று ஒன்று இருக்குமல்லவா? ஏனைய விடயங்கள் எல்லாம் அந்த மூலச் செய்தியைச் சுற்றி, அல்லது அதனை நோக்கியே நகருவதுண்டு. ஆனால் முருகபூபதியின் அனுபவப்பகிர்வுகள் அப்படியானவை அல்ல. செய்தியின் மூலம் என்பது அவருக்கு எந்நேரமும் நகர்ந்துகொண்டே இருக்கும். அல்லது பல மூலங்களின் வழியே செய்தி கடத்தப்படும். அல்லது ஒரே மாட்டை முருகபூபதி பல மரங்களில் கட்டிவிட்டுப் பல மரங்களைப்பற்றிப் பேசுவார். மாடும் அவ்வப்போது வந்து வந்து போகும். இதன் சிறப்பு என்னவென்றால், அவரே அறியாமல், உணராமல் பல பொக்கிசங்கள் அவர் பேச்சின்வழி வந்து வீழும். அதற்காகவே அவரின் கதைகளை நான் குறுக்கிடாமல் தொடர்ந்து கேட்பதுண்டு.
முருகபூபதியின் “சொல்லமறந்த கதைகள்” தொகுதி எனக்கு மிக நெருக்கமான ஒன்று. அதன் வெளியீட்டு நிகழ்வில் நூலைப்பற்றிப் பேசியும் இருக்கிறேன். அதில் உள்ள “வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை” என்கின்ற கட்டுரை மிக ஆழமானது. கல்லை நகர்த்திப்போடுவது. எழுபதுகளில் ஜே.வி.பி எழுச்சியின்போது அவர்களுடைய பிரசாரமேடைகளில் பங்குபற்றிய அனுபவம், எண்பதுகளில் நீர்கொழும்பு, கொழும்பு பத்திரிகையாளர் வாழ்க்கை எல்லாமே சுவாரசியமானது. முக்கியமானது. முருகபூபதியின் ஞாபகசக்தியும் அபாரமானது. எல்லா எழுத்தாளர்கள், நண்பர்களின் படங்களையும் அவர் தன்னுடைய கணினியில் சேகரித்து வைத்திருக்கிறார். அதனாலேயே யாராவது இறக்கும்போது இரங்கல் கட்டுரை, கல்வெட்டு எழுதுவதற்கு முருகபூபதியை எல்லோரும் நாடுவதுண்டு. ஒருமுறை அவருடைய கணினியை நோட்டம் விட்டபோது என்னுடைய படம் ஒன்றும் சிரித்துக்கொண்டிருந்தது. அப்படி என்னதான் எழுதுவார்? “அன்புத்தம்பி ஜேகேயின் இழப்பு தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு ....”. அபத்தம் அங்கிள்.

“சொல்லவேண்டிய கதைகள்” நூலை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன். வாசிப்பில் ஆர்வம் மிகுந்த மெல்பேர்ன் அக்காமார்கள் நால்வர் பேசப்போகிறார்கள். கலக்குங்கோ.


நூல் வெளியீட்டோடு முருகபூபதி பற்றிய ஆவணப்படம் ஒன்றும் வெளியாகிறது. ‘ரஸஞானி’ என்கின்ற இந்த ஆவணப்படத்தை இரண்டு மூர்த்திகள் தயாரித்து இயக்கியிருக்கிறார்கள். ஒருவர் ‘மறுவளம்’ எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி. மற்றையவர் புத்தகவிரும்பியும் ஒளிப்பதிவாளருமான மூர்த்தி. இருவரையுமே தனிப்பட்டரீதியில் அறிவேன். அவர்கள் இந்த ஆவணப்படத்தை எவ்வளவு சிரத்தையோடு தயாரித்தார்கள் என்பதையும் அறிவேன். காய்த்தல் உவத்தல் இன்றி, பயிர், களை என்ற வேறுபாடு பாராது எல்லாவற்றுக்கும் பெய்யும் மழைதான் முருகபூபதி. அவருக்கான ஒரு நன்றி சமர்ப்பணமே இந்த ஆவணப்படம். அதற்காக இரண்டு மூர்த்திகளுக்கும் அன்புகலந்த முத்தங்கள். நானும் இதில் இரண்டு நிமிடங்கள் பேசியிருக்கிறேன். எடிட்டிங்கின் பின்னர் இரண்டு மூன்று செக்கனாவது தேறியிருக்கும் என்று நம்புகிறேன்.

சனி மாலையை எதிர்பார்த்து.

000

30-09- 2017 - சனிக்கிழமை மாலை 5.30 மணி
மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில்
 Preston City (Shire) Hall - Gower Street, Preston 3072

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”