Skip to main content

பெற்ரா



இன்று அலுவலகத்தில் புதிதாக ஒரு நாய் வந்து சேர்ந்தது. இம்முறை அல்சேசன். கஸ்டமர் சேர்விஸில் இருந்த பெண் ஒருத்தி அதனை அழைத்து வந்திருந்தாள்.

“சோ கியூட், இத்தனை நாள் இவன் எங்கிருந்தான்? ஏன் கூட்டி வரவில்லை?” என்று கேட்டேன். ஒரு அல்சேசனை கியூட் என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

“ஓ … தாங்ஸ். இவன் இல்லை இவள் .. பெயர் பெற்ரா.. எனது நண்பியின் நாய் இது. நண்பி புளோரன்சுக்கு விடுமுறைக்குப் போய்விட்டதால் பெற்ராவை நான்தான் பார்த்துக்கொள்கிறேன்”

எங்கள் அலுவலகத்தில் சொந்த நாய்களை மட்டுமில்லாமல் பக்கத்துவீட்டு, சொந்தக்கார, தெரிந்தவர், தெரு நாய்களையும் அழைத்துவந்து உலாவவிடலாம் என்ற விடயம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பெற்ரா கழுதை சைஸில் இருந்தாள். நான் கோப்பி மெசினில் கொட்டைகளைப் போட்டு அரைத்துக்கொண்டிருக்கையில் பின்புறமாக வந்து முதுகுத்தண்டில் ‘டொக்’கென்று மூக்கால் முண்டினாள். யாரடா என்று திரும்பினால் நாக்கைத் தொங்கப்போட்டபடி நின்றாள். தண்ணீர் விடாய்த்திருக்கவேண்டும். ஒரு கிண்ணியில் தண்ணி வார்த்து வைத்தேன். மூசி மூசிக் குடித்துவிட்டு மீண்டும் தொங்கப்போட்டாள். மீண்டும் கிண்ணியில் நிரப்பிக்கொடுத்தேன். குடித்தாள். அவளுக்குப் போதவில்லை. அலுவலகத்தில் ஹீட்டர் போட்டிருந்ததோ என்னவோ, தொண்டை வறட்டியிருக்கவேண்டும். நான்கு தடவை நாக்கைத்தொங்கப்போட்டுத் தண்ணீர் வாங்கிக்குடித்தாள்.

அவ்வளவுதான்.

பெட்றா நாள் முழுக்க எனக்குப்பின்னாலேயே திரிய ஆரம்பித்தாள். என்னருகேயே நின்று பெயார் புரோகிராமிங் செய்தாள். நான் என்னுடைய டெஸ்க்கில் இருக்கும்போது மிகக் கவனமாக என்னருகே இருந்த குப்பைத்தொட்டியில் கிடந்த பேப்பர், டிஸ்ஸியூ எல்லாவற்றையும் வெளியே இழுத்துப்போட்டாள். நான் பாத்ரூம் போனால் என் பின்னாலேயே தொடர்ந்துவந்து வாசலில் படுத்துக்கிடப்பாள். திரும்பும்போது இன்னுமொரு கிண்ணி தண்ணீர் வாங்கிக்கொடுப்பாள். மதியம் நான் சலட் சாப்பிடும்போது ஒரு ரொக்கட் இலையை அவளுக்குத் தூக்கிப்போட்டேன். நன்னிப்பார்த்துவிட்டு பக்கத்து வியற்நாமியின் மீன் வாசத்துக்கு எடுபட்டுப்போய்விட்டாள். மதியத்துக்கு மேலே நான் ஒரு பீன் பையினுள் புதைந்திருந்து மடிக்கணினியை நோண்டிக்கொண்டிருக்கையில் அவள் என் மொட்டைத்தலையில் பேன் பார்த்தாள். ஓரளவுக்குமேலே அவளைப்பற்றிய எண்ணத்தை மறந்து வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.

காதில் இளையராஜா.

‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி’

கொஞ்சநேரத்தில் கெட்ட நாத்தம் ஒன்று மூக்கில் அடித்தது. கஸ்தூரியார் ரோட்டு முட்டுச்சந்திகளில் அடிக்கும் நாத்தம் அது. நாய் மூத்திரம். இந்த அலுவலகத்தில் நான் அறிந்துகொண்ட முக்கியமான விடயம் இதுதான். உலகம் முழுதும் நாய் மூத்திரத்தின் நாற்றம் ஒன்றுதான். எனக்குக் கொஞ்சம்தள்ளி இருந்த வைட்போர்ட் அடியில் பெற்ரா பெய்ஞ்சு வைத்திருந்தது. அது பெற்ராவின் வேலையா அல்லது அலுவலகத்தின் நிரந்தர நாய்களான லூசி, கிரேசி, டேர்போ, பக், டேவ், இதுகளின் ஒன்றின் வேலையா என்று எனக்குத்தெரியவில்லை. பெற்ரா புதிது என்பதால் அதன் வேலையாகவே இருக்கலாம். நான் போய் நாயைக்கூட்டிவந்ததிடம் ‘பெற்ரா பெய்து வைத்திருக்கிறது’ என்பதைச் சொன்னேன்.

‘ஓ நோட்டி பெற்ரா’ என்று அவள் பெற்ராவைத் தடவிக்கொடுத்துவிட்டு அது பெய்துவைத்திருந்த இடத்தைத் துடைத்துக் கழுவிவிட்டாள். அதன்பிறகும் பெற்ரா என்னருகே வந்திருந்து பேன் பார்த்தது. பெய்த நாயைப் பக்கத்தில் விட எனக்கு இப்போது இஷ்டமில்லை. அது பெரிய கிளியோபெற்ராவாகவே இருக்கட்டும். இப்போது எனக்கு அதன் மூத்திர நாற்றமே மூக்கில் அடித்துக்கொண்டிருந்தது. ‘ஓடு நாயே’ என்று விரட்டினேன். அது வேண்டுமானால் என்னைக்கடித்துவிட்டிருக்கலாம். ஒரே கடிதான். யாழ்ப்பாணப் பனங்கொட்டைத்தலையை சுவைத்திருக்கமுடியும். ஆனால் இந்த ஊரின் இராசி அப்படி. நாய் என்றால் கடிக்காது. அன்னாசி இனிக்காது. பாரை மீன் குழம்பு பச்சைத்தண்ணியாக இருக்கும். பச்சை மிளகாய் உறைக்காது. சரி விடுவோம். என்னுடைய தொடர்ச்சியான புறக்கணிப்பாலோ என்னவோ, ஜீலியஸ் சீசருக்குப்பிறகு மார்க் அன்ரனியைக் கவிழ்த்ததுபோல பெற்ரா இப்போது அந்த மீன் சாப்பிட்ட வியற்நாமியிடம் போய்ப் பேன் பார்த்தது. பெற்ராக்களின் இயல்பே இதுதான். ஐந்தே நிமிடங்களில் வியற்நாமி எழுந்துப்போகவும், மீண்டும் ‘ஓ நோட்டி பெற்ரா’ என்று அந்தப்பெண் ஓடிப்போகவும், எனக்கென்றால் அப்படி ஒரு புளுகம். போனஸாக இம்முறை மார்க் அன்ரனியின் கால்களிலேயே பெற்ரா பெய்துவிட்டது.

சற்று நேரத்தில் அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரு ஈமெயில் வந்தது.

‘தயவுசெய்து நாய்களுக்கு அதிகமாகத் தண்ணீர் கொடுக்கவேண்டாம்’

எனக்குக் கடுப்பாக இருந்தது. உனக்குத் துடைக்கவும் கழுவவும் கஷ்டம் என்பதற்காக தவிக்கிற நாய்க்குத் தண்ணீர் கொடுக்காமல் விட முடியுமா?

நான்கு மணிக்கு நான் இன்னொரு கோப்பி ஊற்றலாம் என்று போனேன். பெற்ரா வந்தது. இம்முறை அது என் முதுகை முண்டவில்லை. நாக்கைத் தொங்கப்போடவில்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்துவிட்டு மீண்டும் கிண்ணியில் தண்ணி வார்த்து வைத்தேன். அதற்குக் குடிக்க மனமில்லை. ஆனால் தண்ணி கிடைக்கிறதே என்று குடித்துவைத்தது. மீள நிரப்பிவிட்டேன். அரைவாசியைக்குடித்துவிட்டு ஓடிவிட்டது. நான் கோப்பியை எடுத்துக்கொண்டு என் பீன் பாக்குக்குத் திரும்பினேன். பெற்ராவின் சிலமனைக் காணவில்லை. பொதுவாக அலுவலகத்து நாய்கள் என்னை அண்டுவதில்லை. அவை வந்த முதல்நாள் நட்பு பாராட்டுவேன். பெயர் சொல்லி அழைப்பேன். கியூட் என்பேன். வந்த பின்னேரமே அவைகள் எனக்கு வெறும் நாய்களாகத் தெரியத்தொடங்கிவிடும். நாய்களை நான் வெறுப்பவன் கிடையாது. அதே சமயம் நாய்களை எனக்கு பிடிக்கவும் செய்யாது. யாரோ எங்கோ சொன்னமாதிரி, நாய்களை காதலிக்கவேண்டும் என்று எங்காவது விதி இருக்கிறதா என்ன? சைவம்கூட அன்பே சிவம் என்றுதானே சொல்கிறது.

ஹெட்போனை காதில் மாட்டி, பாட்டை பிளே பண்ணாமல் இருந்தேன். வெயிட்டிங் … வெயிட்டிங்… வெயிட்டிங்…. யெஸ். குரல் கேட்டுவிட்டது.

‘ஓ நோட்டி பெற்ரா…’

மகிழ்ச்சியில் உடல் குலுங்கி எக்காளத்துடன் தொடர்ந்து வேலை செய்யத்தொடங்கினேன்.

Comments

  1. //நாய்களை காதலிக்கவேண்டும் என்று எங்காவது விதி இருக்கிறதா என்ன? சைவம்கூட அன்பே சிவம் என்றுதானே சொல்கிறது.

    உனக்குத் துடைக்கவும் கழுவவும் கஷ்டம் என்பதற்காக தவிக்கிற நாய்க்குத் தண்ணீர் கொடுக்காமல் விட முடியுமா?//

    மற்றவர்களுக்காக நாய் வளர்த்து பட்ட பாடு இருக்கே ,,,,,,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...