Skip to main content

'சமாதானத்தின் கதை' பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம்



அ. முத்துலிங்கத்திற்கு எழுத்துலக வாரிசு கிடைத்துவிட்டார். அ. மு போன்று இலகுநடையிலும், ஐனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும், நீரில் வழுக்கிச்செல்லும் இலைபோன்று தமிழைக் கையாழ்வதும் இலகுவல்ல. வாசகனின் கவனக்குவிப்பு கலைந்துவிடாது கதை முழுவதையும் ஒரே மூச்சில் வாசிக்கவைப்பது ஒரு தனிக் கலை. இவையெல்லாமே 'சமாதானத்தின் கதை' எழுதியவரிடம் உண்டு.

அண்மையில் ஜெயக்குமாரன் சந்திரசேகரனின் (ஜே. கே) சிறுகதைத்தொகுப்பை வாசித்தேன். அருமையான வாசிப்பனுபவம்.

முன்னுரை, என்னுரை, பதிப்புரை என்று எதுவுமின்றி அறிவிப்பின்றி திடீரென வந்துவிட்ட விருந்தினர்போன்று தொடங்குகிறது சிறுகதைத்தொகுப்பு.

முதலாவது கதையான ‘கனகரத்தினம் மாஸ்டர்’ என்னும் கதை, இலங்கையில் வாழ்ந்து, அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த, ஆனால் யாழ் கலாச்சாரச் சிந்தனையில் வாழும் ஒரு ஆங்கில ஆசிரியர்பற்றியது.

வெளிநாட்டு வாழ்க்கை, இலங்கை வாழ்வின் எச்சங்கள், சோகங்கள், கனவுகள், சாதீய எண்ணங்கள், வெளிநாட்டில் வேறினத்தவர்களுடன் பழகுதல், குழந்தைகளுடன் பேரப்பிள்ளைகளுடன் இணைந்து வாழ்ந்து பின்பு தனித்து மனைவியுடன் வாழ்தல், மகனுடனான மனத்தாங்கல்கள், ஈகோ என்று பலவிதமான நுண்ணுணவுகள கலந்த சிறப்பான கதை அது.

கிருசாந்தி படுகொலையை அடிப்படையாகக்கொண்ட ‘உஷ். இது கடவுள்கள் துயிலும் தேசம்’ என்னும் கதை நகர்த்தப்பட்ட உத்திவித்தியாசமானது மட்டுமில்லை கதையையும் மிகவும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

நான் மிகவும் ரசித்த கதை ’சைக்கில்கடைச் சாமி’. வள வள சள சள என்ற வர்ணிப்புக்கள், கதையை அநாவசியமாக அகலிக்கும் எழுத்துக்கள் என்று எதுவுமில்லை. ஓலிம்பிக்போட்டியில் ஓடும் குறுந்தூர ஓட்டக்காரனைப்போன்று, அத்தனையும் கொழுப்பற்ற தனிச் சதை.

சாமியண்ணையின் சுயம் அவரது மனைவியினால் காயப்படுத்தபடுகிறது. அதிலும் “இராவுல வீரவான் முக்குற முக்கு ஊருக்குத் தெரிஞ்சா” என்று அவர் மனைவி அவரது ஆண்மையை கேலிப்படுத்துவது அவரை பாடாய்ப்படுத்துகிறது. மலினமாக கேலி செய்யப்படுவது எத்தனை பெரிய வலியைத் தரும் என்பதற்கு சாமியண்ணை உதாரணம். கதையின் முடிவில் வேறுயாரும் உட்புகுந்துவிடுவார்களோ, அதனால் சாமியண்ணை பிரச்சனைக்குள் சிக்கிக்கொள்வாரோ என்று மனது அடித்துக்கொண்டது. நல்லவேளை, அப்படியொன்றும் நடக்கவில்லை. எல்லா கதைகளும் நீதியை உரைக்கவேண்டும் என்ற அவசியமோ விதியோ இல்லையல்லவா?

அக்கதையை வாசித்து பல நாட்கள் கடந்த பின்பும் சாமியண்ணையின் சைக்கில் கடையில், அவருடன் உட்கார்ந்திருந்து, அவர் ரிம்க்கு நெளிவு எடுததுக்கொண்டிருக்கும் பொழுதுகளில், அவருடன் உரையாடிக்கொண்டிக்கிறேன். அவருடன் பேசுவதற்கு அத்தனை விடயங்கள் அக்கதைக்குள் இருக்கின்றன. இந்தக் கதையினுள் மறைந்திருக்கும் உளவியலை நாம் பேசிக்கொண்டே இருக்கலாம். இக்கதையில் உள்ள சைக்கில்கடைபற்றிய குறிப்புக்களும் அலாதியானவை.

நுண்ணிய உணர்வுமயமான கருக்களைத் தேடியெடுத்து, மனித உணர்வுகளை, கதாபாத்திரத்தின் மனநிலையை, உரையாடல்களை தத்ரூபமாகப் படம்பிடித்து எழுதியிருக்கிறார். இடையிடையே வரும் நகைச்சுவைகள் ரசிக்கவைக்கின்றன.

பதினொரு அருமையான சிறுகதைகளைக் கொண்டதே ‘சமாதானத்தின் கதை’. இந்த நூலை புலம்பெயர் ஈழத்தமிழரின் பதிப்பமான ஆதிரை வெளியிட்டிருக்கிறது. ஆதிரை யாருடையதாக இருக்கும் என்ற கேள்வி அவசியமில்லையல்லவா. ஆம், அவருடையதுதான்.

சில காலமாக இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து வருகிறேன். புத்தக வடிவமைப்பு, தாளின் தன்மை, நிறம், எழுத்துரு, முன்னட்டை பின்னட்டை ஆகியவற்றில் நம்மவர்கள் கவனம் செலுத்துவது குறைவு என்ற எண்ணமே எனக்கிருக்கிறது.

ஆனால், சமாதானத்தின் கதையில் இந்த விடயங்களில் மிகக் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். முன்னட்டையில் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த ஒரு சுவற்றில் இருந்து, பச்சையாகத் தாவரங்கள் வளர்வதைக் குறியீடாகக் காண்பித்திருப்பது ரசிக்கவைக்கிறது.

இலங்கையில் மட்டும் 600 பிரதிகள் விற்றுத்தீர்ந்ததாக பதிப்பக உரிமையாளர் பெருமைப்பட்டார். இது சாதனை என்றே நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் ஜே.கே!
வாழ்த்துக்கள் கஜானியின் அப்பா!

-- சஞ்சயன் செல்வமாணிக்கம்

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...