Skip to main content

ஆதிரை வெளியீடுகள்


 சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் ‘சமாதானத்தின் கதை’ வெளியானது.

ஆதிரை பதிப்பகத்தின் முதல் வெளியீடு இது. அவர்களே எழுத்துப் பிழை திருத்தி, அட்டை வடிவமைப்பு, லே அவுட் எல்லாம் செய்து, அச்சடித்து, விநியோகித்து புத்தகங்கள் விற்று முடிந்ததும் அதற்கான உரிமைத் தொகையையும் கொடுத்தார்கள். ஈழத்தில் சில வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் செய்தார்கள். இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும்கூட வாசிப்பு நிகழ்வுகளை செய்யப்போவதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் அதற்குள் கொள்ளைநோய் பரவிவிட்டது.
'சமாதானத்தின் கதை’ வெளியாகிச் சில மாதங்களிலேயே ஏ.பி.எம் இத்ரீஸ் தொகுத்த ‘என்ட அல்லாஹ்’ எனும் இன முரண்பாட்டுக்கால முஸ்லிம்களின் பாடுகளைச் சொல்லும் சிறுகதைகளைக்கொண்ட நூல் வெளியாகியது. அதன் பின்னர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்த்த சிங்களச் சிறுகதைகளின் தொகுப்பு ‘திருமதி பெரேரா’. பின்னர் சயந்தனின் ‘அஷெரா’. இப்போது மறுபடியும் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்த்த ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ எனும் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதைகள் வெளியாகியிருக்கிறது.
எல்லாமே ஆதிரை வெளியீடு இந்த ஒரு வருடத்தில் பதிப்பித்த புத்தகங்கள்.
இதில் ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ நூலுக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்நூலின் இலங்கைப் பிரதிகள் இலங்கையிலேயே அச்சிடப்படுகின்றன. விலை வெறுமனே 390 ரூபாய்கள். எல்லாப்புத்தகங்களையும் ஓர்டர் பண்ணியாயிற்று. தபால்துறையின் தாமதம், இன்னமும் புத்தகங்கள் வீடு வந்தபாடில்லை.
‘ஊருக்கு உழைத்தல் யோகம்’ என்பதற்கு நண்பர் கேதா ஒரு அற்புதமான விளக்கம் கொடுப்பதுண்டு. ஊருக்கு உழைக்கும்போது ஒருவித யோக மனநிலையில் இருக்கவேண்டுமாம். யார் என்ன சொன்னாலும் சகித்துக்கொண்டு ஒரு யோகிபோல இயங்கினாலேயே இங்கே தப்ப முடியும். புத்தகங்களின் வெளியீடும் அப்படிப்பட்டதுதான். நாரி பிரியும் வேலை. பண இலாபம் என்று பெரிதாக ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. மன நிறைவுக்குச் செய்யும் வேலைதான் இது. அந்த உழைப்பின் அருமையை ஓரளவுக்கு அறிந்தவன் என்ற வகையில் ஆதிரை வெளியீட்டாளர்களுக்கும் விற்பனைக்கூடங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த அன்பும் நன்றியும். குறிப்பாக சயந்தனுக்கும் வைதேகிக்கும்.
ஒரு விசயம். புத்தகங்களுக்குக் கால்களோ இறக்கைகளோ தாமாக முளைப்பதில்லை. அவற்றை வாசகர்களே சுமந்து செல்லவேண்டும். இவை தகும் என்று அவர்கள் உணரும் நூல்களைப் பரிந்துரைக்கவேண்டியதும் வாசகர்களுடைய கடமையே. இன்றைக்குப் பிரபல பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் புத்தகங்களைத் தாமாகத் தேடிப்போய் வாசித்து விமர்சனம் செய்வதில்லை. தன்னைச் சார்ந்தவர்கள் எழுதிய, தன்னைத் தேடி வரும் புத்தகங்களையே அவர்கள் முன்மொழிவதுண்டு. இந்தச் சூழ்நிலையில் தாம் நம்பிக்கை வைத்து வெளியிடும் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் பெரும் பொறுப்பு பதிப்பாளர்களிடம் இருக்கிறது. அதற்கு உதவி செய்யவேண்டிய கடமை வாசகர்களாகிய எங்களிடம் இருக்கிறது. இதனை ஆதிரை முன்னின்று செய்வது மிகுந்த உவகையைக் கொடுக்கிறது.
வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”