Skip to main content

அம்மா ஒரு கிரிக்கட் பைத்தியம்



இன்று நேற்று இல்லை. எங்கள் வீட்டில் டிவி வந்த காலத்திலிருந்தே அவர் கிரிக்கட்டை ரசித்துப் பார்ப்பது வீட்டில் சகஜமாக நடக்கும் விசயம். என் ஞாபகமறிந்து இந்தியன் ஆர்மிக்காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிரிக்கட் எப்போதும் டிவியில் போகும். அப்போது அவர் கபில்தேவ், கவாஸ்கரின் தீவிர விசிரி. பின்னர் தொண்ணூறூகளில் சச்சின், கங்குலியின் ரசிகையானார். கங்குலி நூறு அடித்தால் போதும், அடுத்தடுத்து ஸ்பின்னருக்கு வெளிய வந்து அடிக்கும் சிக்ஸர்களுக்கு அம்மாவின்
கண்கள் விரிந்து தயாராகிவிடும். அப்போதெல்லாம் கிரிக்கட் நாட்களில் இன்னிங்ஸ் பிரேக்கின்போதுதான் எங்கள் வீட்டில் புட்டு அவிக்கப்பட்டுவிடும். துணைக்கு எப்போதுமே மத்தியானக் கறிதான். பின்னேரம் அவர் டிவிக்கு முன்னர் ஈசிச்செயாரில் உட்கார்ந்துவிட்டால் மட்ச் முடிந்து பிரசெண்டேசனும் நிகழ்ந்தபின்னர்தான் ரிமோட் மற்றவர் கைக்குப் போகும். அப்படி ஒரு வெறி.

ஆச்சரியம் என்னவென்றால் எப்போதுமே அம்மா பெரிதாக நாடகங்கள் எதையும் பார்த்ததில்லை. இப்போதும் டிவியில் பார்ப்பது யூடியுப்தான். அதுவும் வீட்டுத்தோட்டம் பற்றிய வீடியோக்கள். Jaffna Suthan காட்டுகின்ற மாலைதீவும் டுபாயும். இடைக்கிடை லோஷன் சொல்லும் ஈழத்து நிலவரங்கள். இப்படி யூடியுப் பரிந்துரைப்பதை ரசித்துப்பார்ப்பார். ஆனால் ஒன்று மட்டும் மாறவேயில்லை.
அது இந்தக் கிரிக்கட்.
கிரிக்கட் என்றால் யார் விளையாடுகிறார்கள் என்ற கணக்கில்லை. பிக் பாஷ் பார்ப்பார். அவுஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் பார்ப்பார். பெண்களுடைய கிரிக்கட்டையும் இரசிப்பார். டிவியில் எப்போதெல்லாம் கிரிக்கட் போகிறதோ அப்போதெல்லாம் அதைப் பார்ப்பார். சென்றவாரம் அம்மாவுக்குத் தொலைபேசியில் அழைத்தபோது கொஞ்சம் பதட்டமாக இருந்தார். என்ன பிரச்சனை என்று கேட்டபோது “நீ போனை வை. நான் பிறகு அடிக்கிறன். கோலி வந்திட்டான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவுஸ்திரேலியா இந்தியா தொடரை இங்குள்ள இலவச சானல்களில் பார்க்கமுடியாது. காயோ என்று ஒன்றிருக்கிறது. அதற்குக் காசு கட்டவேண்டும். அது வேலை செய்யக்கூடிய டிவி வேண்டும். அம்மா எப்படி இந்த ஆட்டத்தைப் பார்க்கமுடியும்? கேட்டேன்.
“யூ டியுபில போகுது. ஆக்களை பார்த்தா கார்ட்டூன்மாதிரித்தான் தெரியும். ஆனால் ஸ்கோர் போடுவாங்கள். கொமென்ரியும் கேக்கும்”
பிரமிப்பாக இருந்தது. யூடியூபில் சிலர் அனிமேசன் லைவ்வாக கிரிக்கட்டைப் போடுவதுண்டு. அதனைத்தான் இவ்வளவு உற்சாகமாகப் பார்க்கிறார் என்று தெரிந்தது.
“இதுக்குப் பேசாம காயோ வாங்கலாமே?”
“அதெல்லாம் எனக்குத்தெரியுமா? நீதான் வாங்கித்தரோணும். எவ்வளவு காசெண்டாலும் பரவாயில்லை. நான் தாறன்”
ஆஸ்பத்திரியில் சாகக்கிடக்கும் நோயாளியின் குடும்பத்தினர் வைத்தியரிடம் பேசுவதுபோல அம்மாவின் குரல் கெஞ்சியது.
“சரி நான் வாங்கித்தாறன்”
“ஆ… இப்பவே வாறியா, நான் வேண்டுமென்றால் புட்டு அவிச்சு முட்டை பொரிக்கவா? நீ செட் பண்ணுறதுக்குள்ள சமைச்சிடுவன்”
அம்மாவைப் பற்றிய தகவல்களை உடனேயே இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு அனுப்பிவைக்கவேண்டும்போலத் தோன்றியது.
“அனே … அது அமேசனில வாங்கோணும். இந்த மட்சு மூண்டு நாளில முடிஞ்சிடும். நான் அடுத்த மட்ச் தொடங்கமுதல் வாங்கித்தாறன்”
அம்மாவின் குரல் தொங்கிவிட்டது.
“சரி அப்ப ஆறுதலா வா. நான் மிச்ச மட்ச் பார்க்கோணும்.”
அவ்வளவுதான். புட்டு, முட்டைப்பொரியல் பற்றி எந்தக் கதையுமில்லை. மனிசி கட் பண்ணீட்டுது.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...