Skip to main content

வாத்துக்கூட்டம்



வசந்த காலத்தின் நடைப்பொழுதுகள் எப்போதும் உவகை கொடுக்கக்கூடியவை.

அதுவும் மனைவியோடு நடக்கும்போது நகைக்குப் பஞ்சமிருப்பதில்லை. மற்றவர்கள் எப்படியோ தெரியாது, ஆனால் ஆண் பறவைகளைப்போலப் பெண் துணைக்கு ஆடியும் பாடியும் நகாசுகள் என பல வித்தைகள் காட்டியும் கவனத்தை ஈர்க்கும் முயற்சி பத்தாண்டுகளாக இன்னமும் தொடர்கிறது. அவள்தான் எல்லாவற்றையும் வெறும் இறக்கைச் சிலிர்ப்போடு சலிப்பாகக் கடந்துபோய்விடுகிறாள்.
ஆற்றங்கரையோடே நடைபாதை அமைந்திருக்கிறது. கூடற் பருவம் முகிழ்ந்து குஞ்சுகள் சகிதம் வாத்துக்கூட்டங்கள் பல வலம் வந்துகொண்டிருந்தன. கூட்டத்துக்கு ஒரு இருபது குஞ்சுகளும் தாயும் தகப்பனும் இருக்கும். அப்போதுதான் நடை பழகும் குஞ்சுகள். சிலது நீந்தக்கற்றுக்கொள்கின்றன. சில குஞ்சுகள் சொல்வழி கேளாமல் அங்கிங்கே எடுபட்டுப்போனால் தாயோ தகப்பனோ ஓடிச்சென்று மீண்டும் அவற்றைக் கூட்டத்தினுள் துரத்திவிடுகின்றன. சிலது தம் பெற்றோரைப்போலவே கரையோரச் சகதிக்குள் தலையை உள்ளே நுழைத்து பிட்டத்தை உயர்த்திப்பிடித்து என்னவோ செய்கின்றன. கேட்டால் தாங்களும் மீன் பிடிக்கிறார்களாம்.

வாத்துக்கூட்டம் ஒன்று. குஞ்சுகள் எல்லாம் கரையோரம் தாயோடு சேர்ந்து சகதியில் குளித்துக்கொண்டிருந்தன. இன்னொரு வாத்து, தந்தையாக இருக்கவேண்டும், பத்தடி தள்ளி நடைபாதையைக் கண்காணித்துக்கொண்டிருந்தது. உமாதேவியார் குளிக்கும்போது காவல்காத்த பிள்ளையார்மாதிரி அவர் உறுமிக்கொண்டு நிற்கிறார். நாம் தெரியாமல் அருகில் போய்விட, உவேக்கென்று கேறியபடி அது எம்மைத் துரத்த ஆரம்பித்தது. அதன் சொண்டு அகலத்திறந்து எம்மிருவரையும் சேர்ந்து விழுங்கிவிடுமாப்போல. ஏற்கனவே பலதடவைகள் மக்பையிடம் அடிவாங்கிய அனுபவத்தில் நான் பறந்துவிட்டேன். கொஞ்சத்தூரம் ஓடிவிட்டுத்திரும்பிப்பார்த்தால் மனைவியும் குடுகுடுவென ஓடிவருகிறாள். பின்னாலேயே அந்த வாத்து அவளை இன்னமும் துரத்திக்கொண்டு வந்தது. ஒரு பெரும் வாத்தைச் சிறு வாத்து ஒன்று துரத்தும் காட்சியைக் கண்டு களிக்கக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.

ஆற்றின் நடுவே கிடந்த பெரும் பாறையின்மீது பத்திருபது வாத்துகளும் குஞ்சுகளும் உட்கார்ந்திருந்தன. இளம்தலைமுறை நடுவேயும் மூத்தவர்கள் சுற்றிவரவும் அமர்ந்திருந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தின் பரிதியில் உட்கார்ந்து தூங்கும் வாத்துகளின் ஒரு பக்க மூளை எப்போதும் விழித்தே கிடக்குமாம். ஏதேனும் சத்தம் சந்தடி வருகிறதா என அவதானிப்பது அவற்றுக்கு அனிச்சை. “போற வாற ஆக்களையெல்லாம் துரத்தி அடிச்சிட்டு அவை மட்டும் நிம்மதியா நித்திரை கொள்ளுறினம், பார்த்தியா?” என்றாள் மனைவி. “அதானே, நல்ல சேட்டை. ஆக்களைக் குழப்பவா?” என்றேன். பொதுவாக வேண்டாம் என்று முறைப்பவள் இன்று மட்டும் “சரி, அவை செய்யிற வேலைக்கு நல்லா வேணும், ஆக்களை நித்திரையால எழுப்பு” என்றாள். நான் மரப்பட்டை ஒன்றை எடுத்து அப்பாறையை நோக்கி எறிந்தேன். அது ஐந்தடி முன்னேபோய் கிளுக்கென்று ஆற்றினுள் வீழ்ந்தது. வாத்துகள் கணக்கேயெடுக்கவில்லை. இப்போது சற்று வலுவான கிளையொன்றை எடுத்து அவற்றை நோக்கி எறிந்தேன். அது பாறையின் அருகே போய் விழ, கூட்டம் இப்போது சுருட்டிக்கட்டிக்கொண்டு எழுந்தது, ஏக சமயத்தில் செட்டைகளை உதறிக்கொண்டது. பின்னர் எல்லாமே ஒரே நேரத்தில் பறக்க ஆரம்பித்தன. ஆற்றைக்கடந்து, நடைபாதையைக் கடந்து நடுவீதியில் அனைத்தும் ஏக சமயத்தில் தரையிறங்கின. அவற்றின் ஓடுபாதையாக இருக்கவேண்டும்.
நாங்கள் தொடர்ந்து நடந்தோம்.
 
முன்னே ஒரு வெள்ளைக்காரப்பெண்ணும் கறுப்பின ஆணும் இணையாக வந்தார்கள். அந்த ஆண் வெகு அலட்சியமாக ஒரு கைக்குழந்தையைத் தோளில் சுமந்திருந்தான். அவர்களோடு ஒரு கவூடுள் இன நாயும் சேர்ந்து நடந்து வந்தது. அவள் கைகளை விசுக்கி விசுக்கி எதையோ பேச இவனுடைய வெள்ளைப்பற்கள் பளிச்சிட்டன. அவர்களது குழந்தை முழுக்க முழுக்கக் கறுப்பாக இருந்தது. "அதெப்படி சாத்தியம்?” என்றாள் மனைவி. “தாய்க்காரி வெள்ளை என்றால் குழந்தைக்குக் கொஞ்சமாவது பொதுநிறம் வராதா?” என்றாள். “எனக்கென்ன தெரியும்?” என்றேன். கூட்டத்தின் பரிதியில் தூங்கும் வாத்தினதைப்போல நம் மூளையும் இவ்வகைக் காட்சிகளுக்காக எந்நேரமும் விழித்தே கிடக்கிறது. விடுப்பு என்பது நம் அனிச்சை. அதுவும் எழுதுபவர்களுக்கு இவ்வகைச் சம்பவங்கள் பனம்பழங்களைப்போல. விழ விழப் பொறுக்கி பின்னர் ஒருநாள் பாத்தி போட்டுக் கிழங்கு எடுத்துவிடுவோம்.

அந்தக் கவூடுள் எம்மிடம் வந்து வாலை ஆட்டி சுற்றிச் சுற்றி வந்தது. அவர்கள் எம்மிடம் மன்னிப்புக் கேட்டார்கள். நான் சிரித்துவிட்டு அந்த நாயைத் தடவிக் கொடுத்தேன். மனைவி அதற்கு என்ன பெயர் என்று கேட்டாள். ரெக்சி என்றார்கள். ரெக்சி ஆணா பெண்ணா என்ற குழப்பம் வந்தது. கேட்டோம். பெண் என்றார்கள். கியூட் என்று சொல்லி அவளைத் தட்டிக்கொடுத்துவிட, ரெக்சி எழுந்து சென்று அருகேயிருந்த யூகலிப்டஸ் மரத்தடியில் கக்கா இருக்க ஆரம்பித்தது. அவர்கள் அதனைக் கூப்பிட அது வராமல் தொடர்ந்து கக்கா இருந்தது. நாம் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். சற்றுத்தூரம் சென்று திரும்பிப்பார்க்கையில் நாயின் கக்காவை அந்த வெள்ளைக்காரி ஒரு பொலித்தீன் பையில் அள்ளிப்போட்டு, சுற்றிக்கட்டிக் கையில் எடுத்துவந்தாள். அந்தக் கறுப்பனின் கையிலிருந்த குழந்தை இப்போது விழித்து சுற்று வட்டாரத்தை நோட்டமிட ஆரம்பித்திருந்தது. நாங்கள் அந்தக் குழந்தையைப் பற்றி எதுவும் விசாரிக்காமல் நாயை மாத்திரம் விசாரித்தது எமக்கே ஆச்சரியமாக இருந்தது.

நாங்கள் துரத்தியடித்தோமே ஒரு வாத்துக்கூட்டம்? அது இப்போதுதான் வீதியைக் கடக்க ஆரம்பித்திருந்தது. அவை ஆற அமர நடந்து முடிக்கும்வரை வீதியில் இருமருங்கிலும் வாகனங்கள் நின்று வழிவிட்டன. முன்னே தாய், நடுவே குஞ்சுகள். இறுதியில் தகப்பன். இந்தக் குஞ்சுகள் சற்று வளர்ந்து பதின்மத்தை எட்டியவை. பறக்கத் தெரிந்தவை. அவ்வப்போது ஆற்றில் வந்திறங்கும் வலசையைப்போலத் தாமும் பரதேசம் சுற்றிவரலாம் என அவை கனவு காணக்கூடும். இந்த உலகமே அவற்றின் இறக்கை மடிப்புக்குள் என்ற எண்ணம் அவற்றின் நடையிலேயே தெரிந்தது. ஒரு வாத்தினது வாழ்நாள் எவ்வளவு என்று தேடிப்பார்த்தோம். ஐந்து வருடங்களாம். அதற்குள் இந்த ஆற்றையும் ஏரியையும் சுற்று வட்டாரத்தையும் அவை தம் இறக்கைக்குள் அடக்கிவிடமுடியும். ஒவ்வொரு வசந்தமும் இணையோடு கூடி மேலும் இருபது குஞ்சுகளைப் பொரித்து, அவற்றைக் கவனமாக வளர்த்தெடுத்து, எதுவெதுவெல்லாம் தன் குஞ்சு, தன் பேரக்குஞ்சு, தன் பூட்டக்குஞ்சு என்று அறியாத கிழப்பருவம் ஒன்றில், பறக்க முனைந்தும் இயலாத கொடுங் கணமொன்றில், தன் உணவைத் தானே தேடித் தெரியும் வலுவை இழந்து, மரத்தடியிலோ ஆற்றின் கரையோரத்திலோ மடிந்து ஒடுங்கும்போதும் இக்கணத்தைப்போலவே அப்போதும் அது ஒரு வாத்தாகவே இருந்துவிடப்போகிறது என்பதைக் குஞ்சுகள் மட்டுமல்ல, அந்தத் தாய் தகப்பனும் உணரப்போவதில்லை. உணரத் தேவையுமில்லை.

வாத்துகள் இன்னமும் வீதிக்கரையை எட்டுவதாக இல்லை. அந்தப் பேரணி உலாவின் அழகை சுற்றமும் நின்று நிதானித்துக் களித்துக்கிடந்தன.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”