Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 5. யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்

 



ன்னும் ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி. 

நன்றாக இருட்டிவிட்டது.  தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கப்பட்டிருந்தாலும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் யாழ் நூலகத்துக்குப் பின்னாலே சூரியன் மறைந்து கொண்டிருந்தது. எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டுக் கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீசத் தயாராகிறார். பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமுமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க, விர்ர்ரென்று பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து பார்க்க, அது மைதானத்தைத் தாண்டி, வீதியைத் தாண்டி, மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு. 

பட் பட் பட் ... கொக்கரக் ... கோ

சேவல் கூவும் சத்தம். எழும்பிப்பார்த்தேன். ச்சிக். வெறுங்கனவு. இன்னமும் விடியவில்லை. காலை நாலு மணி. பிக்மட்ச் தொடங்க இன்னமும் நான்கு மணித்தியாலங்கள் இருக்கின்றன. மீண்டும் படுத்தேன். நித்திரை அதற்குப்பிறகு வரவில்லை. 

 “கடவுளே காண்டீபன் அண்ணா எப்பிடியும் செஞ்சரி அடிச்சு அஞ்சு விக்கட்டையும் விழுத்தோணும்

 *****

தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு. 

அது ஒரு மாசி மாதத்து இறுதி வெள்ளிக்கிழமை. அம்மா முன்தினம் சுட்டு வைத்திருந்த ஐந்தாறு ரோல்சுகளை வாழை இலைக்குள் வைத்துச்சுற்றி, உதயன் பேப்பரால் கட்டி ஒரு பாக்கினுள் போட்டுத்தரத் தயக்கத்தோடு வாங்கினேன். பெடியள் பார்த்தால் நக்கலடிப்பாங்கள் என்று தெரியும். அக்காவின் பேர்த்டேக்குச் செய்த ரோல்ஸ். வெகு அருமையாய்க் கிடைப்பது. பின்னேரம் வீடு திரும்பும்போது  ஒன்று கூட மிச்சம் இருக்காது. வெட்கத்தைப் பார்த்தால் வேலைக்காகாது என்று வாங்கி அதை ஸ்டைலாக ஒருபிபிபாக்கிற்குள் வைத்துக்கொண்டேன். அப்பா என்றைக்கோ சவுதியில் இருந்து கொண்டுவந்த கீறல் விழுந்த கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிப்பார்த்தால் எல்லாமே மங்கலாகத் தெரிந்தது. இருக்கட்டும், லஞ்ச் பிரேக்கின்போதாவது போட்டுக்கொண்டு திரியலாம் என்று அதுவும் பிபிக்குள். ட்ரிங்க்ஸ் போத்தலுக்குள் தேசிக்காய் தண்ணி. சென்ஜோன்ஸ் இலச்சினை பொறித்தத் தொப்பி. சிவப்பு டீசேர்ட் அணிந்துகொண்டு அம்மாவிடம் திரும்பிவந்தேன்.

அம்மாஒரு இருபது ரூவா தாறீங்களா? கச்சானும் ஐஸ் கிரீமும் வாங்கிறதுக்கு

கேட்டதும் தாமதம். அம்மா தொணதொணக்க ஆரம்பித்தார்.

அதான் தேசிக்காய்த்தண்ணி, ரோல்ஸ் எல்லாம் தந்திருக்கிறனல்லோ. உண்ட அப்பர் இங்க உழைச்சுத்தானேக் கொட்டிக்கொண்டு இருக்கிறார். ஐஸ் கிரீமுக்கும் கச்சானுக்கும் காசு தர…”

அப்பா அனுராதபுரத்தில் உள்ள நொச்சியாகம காட்டுக்குள் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் நில அளவையாளராகப் பணி புரிந்துகொண்டிருந்த காலம்.  கொஞ்சக் காலமாகவே தாண்டிக்குளம் பக்கம் அடிபாடு. பாதை மூடிக்கிடந்த கோபம் அம்மாவுக்கு. எனக்கும் காசு அனுப்பாத அப்பா மீது கோபம் வந்தது.

என்னட்ட ரெண்டு ரூவா இருக்கு. ஒரு எட்டு ரூவா தந்தீங்கள் எண்டால் கோனாவது வாங்கிக் குடிக்கலாம். ஐஸ் சொக் கூட பத்து ரூவா. ப்ளீஸ் ... சிநேகிதங்கள் எல்லாம் இண்டைக்குக் காசு கொண்டு வருவாங்கள்

சின்னப்பெடியனுக்கு காசைக்குடுத்து பழுதாக்காதீங்கோஎன்ற அக்காவின் முறைப்பாட்டையும் மீறி அம்மாவுக்கு என்னைப் பார்க்க இரக்கம் வந்திருக்கவேண்டும். பத்து ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினார். வாங்கிப் பொக்கட்டினுள் போட்டுவிட்டு அக்காவைப்பார்த்து நெக் காட்டினேன். பத்துரூபாய் சுளையாக வாங்கிவிட்டேன்; அக்கா எப்படியும் தாங்கமாட்டாள். சென்ஜோன்ஸ் தோற்கவேண்டும் என்று நேர்த்தி வைத்தாலும் வைத்திருப்பாள். சொல்ல முடியாது

வீட்டுக்குள் நிறுத்திவைத்திருந்த சைக்கிளை சன்ஹூடுக்குள் இறக்கும்போது வாசலில் கீர்த்தி வந்து நின்றான். ஆளையும் தோரணையையும் பார்க்கச் சிரிப்பாக இருந்தது. பிரேமதாசா கொடுத்த அந்தக்காலத்து ஒருவித காக்கி நீலத் துணியில் தைத்த காற்சட்டை. அது பாட்டுக்கு பாவாடையாட்டம் பொங்கிப்போய்க்கிடந்தது. சம்பந்தமேயில்லாமல் மேலுக்கு ஒரு சிவப்பு டீஷர்ட், உடம்பை இறுக்கிப்பிடித்திருந்தது. அவனுடைய மூன்றாவது பிறந்தநாளுக்கு வாங்கியதாக இருக்கவேண்டும். கட்டை டீஷர்ட் மேலெழும்பி வயிறு வேறு தெரிந்தது. முகத்தில் கூலிங்கிளாஸ், சென்ஜோன்ஸ் தொப்பி, லுமாலா சைக்கிளில் சிவப்புக் கறுப்புக் கொடி என்று ஆள் ஒரு முடிவோடுதான் வந்திருந்தான். பிக்மட்ச் என்றால் சும்மாவா? அதுவும் நாங்கள் சென்ஜோன்சில் இணைந்தபின்னர் நடக்கும் முதல் பிக் மட்ச் அது. ஏதோ இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் போன்ற பீஃலிங்கைக் கொடுத்தது. கையில் அன்றைய உதயன் பேப்பரில் வந்திருந்த சிறப்பு பிக்மட்ச் செய்திகளை மனப்பாடம் செய்துகொண்டிருந்தான் அவன். அணிகளின் படங்களும் அதில் இருந்தன. 

மச்சான் ... எங்கட ஆக்கள் ஸ்டைலா கொலரை கோர்ட்டுக்கு வெளிய விட்டிருக்கிறினம் .. சென்றல்காரர் உள்ளுக்கு விட்டிருக்கிறினம்

அதுக்கென்ன?

கீர்த்தி பதில் சொல்லாமல் தொடர்ந்தான்.

டேய்நல்லதா காஞ்ச ரெண்டு தடியும் ஒரு எண்ணைப் பரல் கேனும் தேடோணும் ... இண்டைக்குக் கிரவுண்டடில அதுகள காணக்கிடைக்காது

கீர்த்தி கேற்றடியில் இருந்து கத்த, நான் கள்ளமாகப் பத்தியடிக்குப் போய், சத்தம் போடாமல் அம்மா எண்ணை ஊற்றி வைக்கும் தகரக்கேனை எடுத்தேன். அதில் கால்வாசிக்குப் பொரித்த எண்ணை ஊற்றியிருந்தது. அதை இன்னொரு சட்டிக்குள் ஊற்றிவிட்டு தேங்காய் பொச்சை சன்லைட்டில் தேய்த்து எண்ணைக் கேனை கிணற்றடியில் 'உரஞ்சிக்' கழுவினேன்.

என்னடா வெள்ளனயே பெரிய கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கபோறவன் மாதிரி நேரம் போயிட்டு எண்டு துள்ளிக்கொண்டிருந்தனி. இப்ப கிணத்தடில என்ன செய்து கொண்டிருக்கிற?

ஒண்டுமில்லை சிலிப்பர் முழுக்க சேறு ... கழுவிக்கொண்டிருக்கிறன்

சத்தம்போடாமல் குசினி யன்னலுக்குக் கீழாகப் பதுங்கிக் கேற்றடிக்குப் போனேன். கீர்த்தி ஏற்கனவே பழையத் தும்புத்தடியை ரெண்டாக உடைத்து வைத்தபடி தயாராக நின்றான். டபிள்ஸ் ஆரம்பமாகியது. நான் சைக்கிள் மிதிக்க அவன் பார்த்தடியில் இருந்தபடி தகர டின்னை வைத்து தாளம் போடத் தொடங்கினான். சைக்கிள் சவாரி பிரஷாந், குகன், மக்கர், சுட்டா என்று ஒவ்வொருவர் வீடுகளுக்கும் போய் இறுதியில் நல்லூரை எட்டியது. ‘சென்ஜோன்ஸ் வெல்லவேண்டும். காண்டீபன் அண்ணே செஞ்சரி போடோணும்என்று நல்லூரானுக்குத் தேங்காய் உடைச்சு, சொட்டை எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டே ஆரிய குளத்தடிக்குப் போகிறோம். அங்கே பிரியா, குணாலதாஸ் குரூப்பும் இணைந்துகொள்ள இப்போது பதினைந்து பேர், பத்து சைக்கிள், பத்து சிவப்புக் கறுப்புக் கொடிகள், நாலைந்து தகர டின்கள் என தாளம் அந்த ஏரியாவையே அதகளப் படுத்தியது.

கொலிஜ் கொலிஜ்சென்ஜோன்ஸ் கொலிஜ்
எங்கட கொலிஜ் ... சென்ஜோன்ஸ் கொலிஜ்
அப்பேக் கொலிஜ் ... சென்ஜோன்ஸ் கொலிஜ்
வாட்ஸ் கலர்? ரெட் அண்ட் ப்ளக்
ஹூ இஸ் கப்டின்?காண்டீபன்
ஹூ இஸ் கப்டின்?காண்டீபன்
தீபன் தீபன் ... காண்டீபன்
எங்கட தீபன்காண்டீபன்
செஞ்சரி தீபன்காண்டீபன்
அடியுங்கோ அண்ணா பவுண்டரி சிக்ஸர்
போடுங்கோ அண்ணா .. பொல்லுப்பறக்க
சென்றலால ஏலாது
ஏலுமெண்டா பண்ணிப்பார்
ஏலாட்டி விட்டிட்டு போ

தகரச் சத்தமும் கூச்சலும் சிவப்புக் கறுப்புக் கொடியுமாக போகும் சமயத்தில் தூரத்தில்தமிழீழக் காவல் துறைவேதாளர் கொமிக்ஸில் வரும் படையினரின் யூனிபோர்மில் நிற்பதைக் கண்டவுடன் நாங்கள் கப்சிப். பலாலி ரோட்டையே மறித்தபடி சைக்கிளில்  பரலளாக வந்துகொண்டிருந்தவர்கள் திடீரென்று ஒன்றின் பின் ஒன்றாக வரிசையில் வீதியோரமாகப் போக ஆரம்பித்தோம். வேம்படிச் சந்தியில் ஒரு காவல்துறை அண்ணர் தெரியாத்தனமாக எம்மைப்பார்த்து சிரித்துவைக்கத் தாளம் மீண்டும் ஆரம்பித்தது. 

எங்கட துறை காவல் துறை
மக்களின் துறை காவல் துறை

காவல் துறைக்குக்காதல் துறைஎன்றும் ஒரு பட்டப்பெயர் இருந்தது. அந்தப்பெயருக்குக் காரணம் அப்போதெல்லாம் காவல்துறை அடிக்கடி காதல் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதுண்டு. ஓடிப்போன காதலர்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். அது பெரிதாக சமூக வன்முறைகள் இல்லாத காலப்பகுதியாதலால் அவர்களின் தலையாய பணி அதுவாகவே இருந்தது. 

கீர்த்தி அடுத்த நூலை எடுத்துவிட்டான்.

எங்கட துறை காதல் துறை
மக்களின் துறை காதல் துறை


பதிலுக்கு அவர் கோபத்தில் ஏதோ சொல்லி எங்களை நிறுத்துமுன்னரேயே நெக் காட்டிவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் வேகம் பிடித்தோம்.

*****

யாழ்ப்பாணத்துக் கிரிக்கட். எங்களுக்கெல்லாம் நினைத்தவுடனேயே சும்மா ஜிவ்வென்று சுருதி ஏறும் கிரிக்கட் எது என்றால் அது தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட கிரிக்கட்தான். வெறும் ஆறு மணிநேரம் டிவி முன்னால் இருந்து பார்த்துவிட்டு நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணும் ஆட்டங்கள் அல்ல அவை. அது ஒரு வாழ்க்கை. அந்த ஆட்டங்கள், இடம்பெற்ற மைதானங்கள், அந்தக் காலப்பகுதி, அரசியல் நிலை எல்லாமே கூடிக்கலந்த வாழ்க்கை. அதுவும் தொண்ணூறுகளின் முதற் பாதி. இந்திய இராணுவம் திருப்பி அனுப்பப்பட்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் வந்து, மக்கள் புதிய ஒரு சூழ்நிலைக்குத் தயாராகிக்கொண்டிருந்த சமயம்.  ஊருக்கு வந்துகொண்டிருந்த லக்ஸபான மின்சாரம் பிரேமதாசா-புலிகள் தேனிலவு முடிந்து கொஞ்சநாளில் கட் ஆகிக் கூடவே பொருளாதாரத் தடைகளும் வந்து சேரவே, டிவியில் பார்க்கும் கிரிக்கட்டையும், நரேந்திர கிர்வாணியையும், சச்சின், விவியன் ரிச்சர்ட்ஸ், இம்ரான், மியன்டாட் போன்ற பெயர்களையும் மறந்துவிட்டு, யாழ்ப்பாணம் தன்னுடைய சொந்த ஹீரோக்களைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்தது.  


  *****


மைதானத்தை அண்மித்தபோது கூச்சலும் விசில் சத்தமும் வானத்தை எட்டியது.

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தின் மூலை முடுக்கெங்கும் சிவப்பு, கறுப்பு, நீலம், பிரவுண் எனக் கொடிகள். செவிப்பறை வெடிக்கும் அளவுக்கு மண்ணெண்ணெய் பரல்களில் போடும் தாளச்சத்தம். ஆங்காங்கே டோலக்குகள். கூலிங் கிளாசுகள். அந்த வெயிலிலும் சப்பாத்துப் போட்டு ஸ்டைலாகத் திரியும் மாணவர்கள். மைதானத்தின் வடக்குப் பக்கம் மணிக்கூண்டு கோபுரம். அதில் இயங்காத கடிகாரம். அதன் உச்சியில் ஒரு சேவல் சிலை இருந்ததாகவும் சுரேன்குமார் அண்ணா அடித்த சிக்ஸரால்தான் அது உடைந்தது என்றும் அவசர அவசரமாக மைதானத்திலேயே ஒரு கர்ணபரம்பரைக்கதை பரவ ஆரம்பித்தது. இதையே சென்றல் மாணவர்களிடம் கேட்டால் வேறு ஒருவரின் சிக்ஸ் என்பார்கள்.

கிழக்குப்பக்கம் யாழ் மத்திய கல்லூரி. மைதானத்தைப் பார்த்துக்கொண்டே இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள். அங்கேதான் ஆட்டத்தின் சியர்ஸ்கேர்ள்ஸ் நிற்பார்கள். ஒன்றில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் நின்றுகொண்டு மத்திய கல்லூரி அணிக்குச் சப்போர்ட் பண்ண, மற்றயதில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பெண்கள் எங்களுக்கு, அதாவது   சென்ஜோன்சுக்குச் சப்போர்ட் பண்ண வந்திருப்பார்கள். 

அதிகமாகக் கூலிங் கிளாஸ் போடுவதாலோ அல்லது இயற்கையாகவேதானோ தெரியாது. சுண்டுக்குளி பெண்கள் இருக்கும் பக்கம் எப்போதும் கொஞ்சம் குளிர்ச்சி அதிகமாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தில் சைக்கிளில்  எதிர்ப்பட்டால் அட்லீஸ்ட் ஒரு சிரிப்பாவது சிரித்துவிட்டுப் போகும் பெண்கள் இந்தப் பெண்கள்தாம். அவர்களிடம் அழகும் திமிரும் அதிகம் இருக்கும். எங்கள் ரேஞ்சோடு ஒப்பிடுகையில் அவர்களுக்கு ஷேக்ஸ்பியர் லெவலுக்கு இங்கிலீஷ் தெரியும். சும்மா வெட்டி ஆடுவார்கள். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த இங்கிலீஷ் புத்தகத்தில் இருந்தமீ அண்ட் மை டிவியை வைத்துச் சமாளிப்போம். 

ஆனால் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் அப்படியல்ல. பார்த்தால் தலை குனிவார்கள். அவர்கள் வெட்கத்தில் நிறைய நிஜம் இருக்கும். குவிஸ் போட்டி என்றால் சிக்ஸர் பவுண்டரி அடிப்பார்கள். படிப்பில் சுட்டிகள். அதில் கவனம் அதிகரித்ததால் கண்ணாடியைப் பார்த்து டச்சப் பண்ண மறந்து விடுபவர்கள். சின்ன வயதில் பெரிதாக அவர்கள் என்னை டச் பண்ணவில்லை. ஆனால் பதினெட்டு வயதில் டச்சப், பட்ச்அப், பாக்கப் எல்லாமே பண்ணியது வேம்படி நண்பிகள்தான் என்று இந்த இடத்தில் சொல்லிச் சமாளிக்கவேண்டிய தேவையிருக்கிறது.


மீண்டும் மத்திய கல்லூரி மைதானத்துக்கு வருவோம். கிரவுண்டுக்குத் தெற்காலே போனால் பாழடைந்த சுப்பிரமணிய பூங்கா. நின்ற ஓரிரு மரங்களிலும் மாணவர்கள் ஏறி உட்கார்ந்து வசதியாக ஆட்டத்தைப் பார்க்க ரெடியாக இருந்தார்கள். ஆங்காங்கே ஐஸ் கிரீம் வான், சுண்டல், கச்சான் கடைகளில் கூட்டம் அள்ளியது. மேற்கே யாழ் நூலகம். அப்போது எரிந்த நிலையில் இருந்த கம்பீரம் சந்திரிக்கா பின்னாளில் மீண்டும் திருத்தித் தந்தபின்  தொலைந்துபோய் இருந்தது. அவனே எரித்து அவனே கட்டித் தருகிறான். மீண்டும் அவனே எரிப்பான். உன்னால் என்ன செய்யமுடியும்? என்று அது என்னைப் பார்த்துப் பல தடவைகள் நக்கலடித்ததுண்டு. 

*****

தொண்ணூற்று இரண்டாம் ஆண்டுமுதல் தொண்ணூற்று ஐந்தாம்  ஆண்டு இடம்பெயர்வுவரை யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்டுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.  ஏக காலத்தில் எல்லாப் பாடசாலைகளிலும் திறமையான வீரர்கள் அப்போது இருந்தார்கள்.  முதலில் ஞாபகத்துக்கு வருபவர் காண்டீபன் அண்ணா. சென்ஜோன்ஸ் கப்டின். ஆறரை அடி உயரம். நடக்கும்போது ஒரு பக்கம் சரிந்து நடக்கும் ஸ்டைல் அவருக்கே உரியது. அதைப்பார்த்து எல்லாச் சிறுவர்களும் அப்படியே அந்தக்காலத்தில் சரிந்து நடப்பார்கள். காண்டீபன் அண்ணா ஓபன் பவுலிங் லோங் ரன் அப் எடுத்துக்கொண்டு வந்தாரே என்றால் விக்கட் கீப்பர் பீஷ்மன் அண்ணா வழமையான தூரத்திலிருந்து இரண்டு மீட்டர் பின்னாடி போய்நிற்பார். பந்தை வீசிவிட்டு அரை பிட்ச் தாண்டியும் பலோ அப் இருக்கும். நெருக்கமாகப் போய் பட்ஸ்மனைச் சாய்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி நடப்பார். அதே காண்டீபன் அண்ணாதான் சென்ஜோன்சின் டூ டவுண் பட்ஸ்மனும். சச்சின்போல. ஒரே சீசனில் அவர் மூன்று செஞ்சரிகள் அடித்ததாக ஞாபகம். அதிலும் ஒன்று 151 ரன்ஸ்.  அத்தோடு பீஷ்மன், கேர்ஷன், யோகதாஸ் என்று சென்ஜோன்சின் தூண்கள் பல. 

சென்ஜோன்ஸ் கதை இப்படி என்றால் சென்றல் பக்கம் மணிவண்ணன், பிரபாகரன், ரகுதாஸ், ஆகாஷ், கோழி சுரேஷ், லட்டு என்றும் யாழ் இந்துவில் சின்ன வரதன், நரேஷ், கொக்குவில் இந்துவில் பண்டா, யாழ்ப்பாணக்கல்லூரி சிவசுதன் என்று யாழ்ப்பாணத்தில் பாடசாலைக் கிரிக்கட் உச்சத்தில் இருந்த சமயம் அது. வில்ஸ் கிரிக்கட் ரேட்டிங்போல உதயனிலும் அப்போது ரேட்டிங் ஒன்று போய்க்கொண்டிருந்தது. சிறந்த துடுப்பாட்டவீரர், பந்துவீச்சாளர், சகலதுறை ஆட்டக்காரர் என்று அதற்கு ஒரு போட்டியும் நடக்கும், எழுதிப்போடலாம். வென்றால் பரிசு நூறு ரூபாய். காண்டீபன், சிவசுதன், ரகுதாஸ், நரேஷ் பெயர்கள் பொதுவாக முன்னிலையில் இருக்கும்.

யாழ் இந்துக்கல்லூரி மைதானம், யாழ் நகரின் சென்டர் பீஸ். அந்த நேரங்களில் கோட்டை அடிபாடு முடிந்திருந்தாலும் ஆர்மி பண்ணைப்பாலத்துக்கு அப்பால் நிலை கொண்டிருந்ததால் முத்தவெளி, துரையப்பா அரங்கு, மத்திய கல்லூரித் திடல்கள் பெரும்பாலும் பிரபலமாக இருக்கவில்லை. ஆர்மி ஷெல் அடிப்பான் என்று அம்மா அங்காலப் பக்கம் போகவிடமாட்டார். அதனால் யாழ் இந்துக்கல்லூரி மைதானம்தான் எங்களின் ரோமானிய கொலோசியம். பயங்கர சின்ன கிரவுண்ட் அப். ஷோயிப் அக்தர் ஒரு பவுன்சர் போட்டாலே பந்து மதிலுக்கு அப்பால் இரண்டு வளவு தாண்டிப்போய் விழுமளவுக்குச் சின்ன கிரவுண்ட்.

மணி ரியூசனில் வில்வரின் கொமேர்ஸ் வகுப்புக்குப் பீஸ் கட்டுவதே அந்த வகுப்பைக் கட் பண்ணுவதுக்குத்தான்.  காலையிலேயே உதயனில்இன்றைய ஆட்டங்கள்பார்த்துவிடுவேன். வகுப்பைக் கட் பண்ணி யாழ் இந்து மைதானத்துக்குப் போய், அப்பிடியே கஸ்தூரியார் ரோட்டோரமாகச் சைக்கிளை மதிலில் சரித்துவிட்டுச் சீட்டில் இருந்தவாறே மட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் மதிலில் ஒட்டியிருக்கும் முள்ளு முள்ளுக் கல்லுகள் குத்தும். சுவரில் தேய்த்திருக்கும் எச்சில் சுண்ணாம்பு பட்டுக் கை அவியும். வெயில் கொளுத்தும். ஒரு உப்பு மிளகாய்த்தூள் போட்ட மாங்காய் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே ஆட்டத்தைப் பார்த்தால் சும்மாகமறும்’.

ஆட்டத்தில் கண் இருக்கும்போது வீதியிலும் ஒரு கண் இருக்கவேண்டும். அந்தநேரம் யாராவது பெண்கள் கூட்டம் சைக்கிளில் வந்தால் ஆட்டத்தை மறந்துவிடுவோம். எவனாவது சிக்ஸ் அடித்து மண்டையில் வந்து பந்து பட்டாலும் நாங்கள் கவனிக்கமாட்டோம். பதினாலு வயசு. எங்கட மக்ஸிமம் லொள்ளு இவ்வளவுதான்.

அக்கோய் ... பின் சில்லுக்குக் காத்து போயிட்டுது
மஞ்சள் சட்டை ... உம்மட கொப்பி சைக்கிள்  கரியரால விழப்போகுது
கண்ணாடி நல்லா இருக்கு? எங்க வாங்கினீங்கள்?
டேய் .. நடுவில போற ஏசியா சைக்கிள் ... எண்ட ஆள்டா
என்ன நடை, சின்ன இடை, கையில் என்ன குடை. சிங்காரக் குடை, சிங்க மார்க் குடை
கொண்டையில் தாழம்பூ, கூடையில் வாழைப்பூ, நெஞ்சிலே என்ன பூ?

அநேகமாகக் கணக்கெடுக்கமாட்டார்கள். எப்போதாவது அதிர்ஷ்டம் அடித்தால் பார்த்து முறைப்பார்கள். அவ்வளவுதான். இதுவே தனியாக நின்று மேட்ச் பார்த்தால் வாலைச்சுருட்டிக்கொண்டு நல்ல பெடியனாக, அவர்கள் கவனித்தாலும் கவனிக்காததுபோல மட்ச்சைக் கவனமாகப் பார்ப்போம். சில நேரங்களில் சொந்தக்காரர் யாராவது அந்தப் பாதையால் போனால்  வீட்டில்போய் போட்டுக்கொடுத்து விடுவினம். அப்புறம் என்ன, வீடு போனதும் போகாததுமாகக் காவல்துறை விசாரணை ஆரம்பமாகும்.

  *****

பாடசாலை கிரிக்கட்டுகள் பொதுவாக வெள்ளி மதியம் ஆரம்பித்துச் சனியும் தொடர்ந்து நடைபெறும். சென்றல்-சென்ஜோன்ஸ் அணிகளின் வடக்கின் பெரும் போரும், சென்பற்றிக்ஸ்-யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு இடையிலான பொன் அணிகள் போரும் வெள்ளி, சனி என இரண்டு நாட்களும் திருவிழாவைப்போல நடைபெறும். 

பொதுவாகவே சென்றல் அணி தரமான அணியாக மிளிர்வதுண்டு. வெல்லவேண்டும் என்கின்ற வெறி உள்ள ஆஸ்திரேலியா போன்ற அணி சென்றல். அவர்கள் முன்சுற்று ஆட்டங்களில் சொதப்பினாலும் பிக்மட்ச் என்று வந்தாற் பின்னுவார்கள். சென்ஜோன்ஸ் பல நட்சத்திர வீரர்களைக் கொண்டிருந்தாலும் பிக் மட்ச்சில் தடுமாறிவிடும். யாழ் இந்து, கொக்குவில் இந்து இரண்டும் ஏனைய இரு முக்கிய பாடசாலை அணிகள். இதைவிடவும் ஸ்கந்தா, ஸ்டான்லி, யூனியன், மகாஜனா என்றும் அணிகள் இருந்தன. அவை எல்லாம் பிரபல அணிகள் வெளுத்துவாங்குவதற்குக் களம் அமைத்துக் கொடுக்கும் சிம்பாப்வே, பங்களாதேஷ் ரக அணிகள். இந்த அணிகளுள் டார்க் ஹோர்ஸ் என்றால் அது சென்பற்றிக்ஸ் கல்லூரி. சத்தம்போடாமல் சில நேரங்களில் அவர்கள் பெரும் ஜாம்பவான்களைச் சாத்தி அனுப்புவார்கள். அதில் பல தடவை அடிவாங்கிச் செத்தது நம்மட சென்ஜோன்ஸ் அணிதான்.

அப்போது பல கிண்ணங்களுக்குப் போட்டி நடக்கும். KCCC கிண்ணம், உதயன்-ஷப்ரா கிண்ணம், ஜொலி ஸ்டார்ஸ் கிண்ணம் எனப் பல. போட்டிகள் மத்திய கல்லூரி, இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்து, யாழ் பல்கலைக்கழக மைதானங்களில் நடைபெறும். சென்றலைட்ஸ், ஜோனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஜோலிஸ்டார்ஸ், KCCC, ஷப்ரா, அரியாலை சனசமூக நிலையம், வட்டுக்கோட்டை, ஸ்டான்லி எனப் பல கிளப் அணிகள். சென்றலைட்ஸ் என்றால் சண்முகலிங்கம்(இரும்பன்), ஜோனியன்ஸ் என்றால் சூரியகுமார்(சூரி), ஜொலிஸ்டார்ஸ் என்றால் தயாளன் என ஐம்பது வயதுக்காரர்களும் அணியில் முக்கிய ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். இரும்பன் ரன் அப் எடுத்து பவுலிங் போட்டால் பந்து எகிறிக்கொண்டு போகும். அதுவே யாழ் இந்து மைதானம் என்றால் கீப்பர் விடுவதெல்லாம் பின் மதிலில் பட்டு மதிலுக்கு மேலால் எம்பி விழும். அத்தனை வேகம் அந்த வயதிலும். 

கொக்குவில் இந்து இன்னொரு முக்கிய மைதானம். அதை மைதானம் என்று சொல்லுவதைவிட வளவு என்று சொல்லுவதே சாலப்பொருத்தம். அதன் இரண்டு பக்கங்களின் நீளமும் முப்பது மீட்டர்கள்கூட வராது. மதில் சுவர்தான் பவுண்டரி லைன்.  சுவரில் புல்லாகப் போய்ப் பட்டாலும் பவுண்டரிதான் கொடுப்பார்கள். சிக்ஸுக்கு மதில் தாண்டவேண்டும். அப்படி ஒரு ரூல் அங்கே. ஒருமுறை யாழ் பல்கலைக்கழகத்துக்கும் ஜொலிஸ்டார்ஸ் அணிக்கும் மட்ச் நடக்கிறது. ஓபன் பட்டிங் திலக். நான் நேரே கீப்பருக்கு பின்னால் பவுண்டரி லைனில் சுடுமணலில் செருப்பைப் போட்டு அதற்கு மேல் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நரேன் அண்ணா பந்து வீசுகிறார். சீறிக்கொண்டு வந்து பந்து விக்கட்டில் பட்டுத் தெறிக்க, பெயில்ஸ் அப்பிடியே ஆகாயத்தில் சரக்கென்று பறந்து வந்து என் காலடியில் விழுந்தது. அவ்வளவு சின்ன சைஸ் அந்த மைதானம்.

எங்கள் வீடு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருந்ததால் அதிகமான கம்பஸ் ஆட்டங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அப்போது கம்பஸ் அணியில் சின்ன வரதன், பெரிய வரதன், திலக், சுதேசன் தொட்டுப் பின்னாளில் பீஷ்மன் என முக்கிய பலர் விளையாடினார்கள். அருமையான அணி. இப்போது பூங்காவாக மாற்றப்பட்டிருக்கும் பரமேஸ்வராக் கோயிலின் முன் மைதானத்தில் பல ஆட்டங்கள் நடக்கும். அந்த மரங்களுக்குக் கீழே இருக்கும் பெஞ்சுகளில் இருந்து மட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் முதல் வருட அக்காமாரைச் சீனியர்கள் கூட்டிக்கொண்டுவந்து செய்யும் ராக்கிங்கைக் கூடப் ப்ரீ ஷோவாகப் பார்க்கலாம். அந்தஎன்ன கலர்? என்ன கலர்? என்ன கலர்?என்று வெறும் ஈர்க்கை வைத்து ஒரு அக்காவைச் சீனியர் நாதாறி ஒருத்தன் மிரட்டிக் கேட்ட ராக்கிங் இன்னமும் நினைவு இருக்கிறது. விளங்கப்படுத்தினால் இன்னொரு மெக்சிகன் சலவைக்காரி ஜோக்காகப் போய்விடும். வேண்டாம்.

ஒருமுறை ஆறுபேர் கொண்ட அணிகளுக்கான ஐந்து ஓவர் சுற்றுப்போட்டி இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்தது.  அதிலே யாழ் செயலக-கச்சேரி அணி என்று ஒரு அணி பங்குபற்றியது. அது ஒரு கனவு அணி. ட்ரீம் டீம். அந்த அணியில் விளையாடிய ரகுதாஸ், காண்டீபன், பிரஷாந்தன் என எல்லோருமே அதிரடி ஆட்டக்காரர்கள். சென்றல், சென்ஜோன்சில் எதிரும் புதிருமாக மோதியவர்கள் ஒரே அணியில். ஒரு ஆட்டத்தில் ரகுதாஸ் அண்ணா ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். போட்டதெல்லாம் கஸ்தூரியார் ரோட்டில் இருந்த பஸ் தரிப்பிடத்துக்கு மேலாகப் பறந்து ஒவ்வொரு வீடுகளிலும் விழுந்துகொண்டிருந்தது. கூடவே காண்டீபன் அண்ணாவும் சேர்ந்து பந்தை அக்கம் பக்கத்து வளவுகளுக்குள் அனுப்பிக்கொண்டிருக்க, 

ஒரு நிறைவேறாத ஆசை. 

எமக்கென்று ஒரு அணி. அதிலே காண்டி, ரகுதாஸ், பீஷ்மன், சுரேஷ், லட்டு, நரேஷ், பிரபா, கிருபா, சின்ன வரதன், பெரிய வரதன் எல்லோரும் சேர்ந்து ஒரு அணி. உலகக் கிண்ணத்தில் இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என  எல்லா நாட்டு அணிகளையும் துவம்சம் செய்து இறுதிப்போட்டி இந்தியாவுடன் ஆடுகிறது. அந்தப் பக்கம் சச்சின், காம்பிளி. இந்தப்பக்கம் பௌலிங் போடுவது காண்டீபன் அண்ணா. 

எப்படி இருந்திருக்கும்? 

 *****

மீண்டும் வடக்கின் பெரும்போருக்கு வருவோம். தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு ஆட்டம். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றல் அணி முந்நூறுக்கும் மேலே அடித்துவிட்டு மாலையில் டிக்ளேர் பண்ணியது. சென்ஜோன்ஸ் அணியில் யோகதாஸ் ஐந்து விக்கட்டும் காண்டீபன் நான்கு விக்கட்டும் நூற்றுச்சொச்ச ரன் கொடுத்துக் கைப்பற்றினார்கள். சென்றல் பக்கம் ஆகாஷ் எழுபது ரன்கள் அடித்திருக்கவேண்டும். அந்த ஆட்டத்தில் லட்டு என்கின்ற லட்சுமிகரன் எட்டு விக்கட் எடுத்துச் சென்ஜோன்சை சரித்ததாக ஞாபகம். காண்டீபன் அண்ணா சமாளித்து ஆடி 74 ரன் அடித்து ஸ்லிப் கட்சில் அவுட் ஆனார். கேர்ஷன் அண்ணா வந்த வேகத்தில் கவர், பொயிண்ட் என்று எல்லா இடமும் சரமாரியாக அடித்து முப்பத்துச் சொச்ச ரன்னில் ஆட்டமிழக்க, பின்னுக்கு வந்த பிரதீபன் அண்ணா, எப்படிப்போட்டாலும் வழிச்சு துடைக்கும் பட்ஸ்மன், இரண்டு சிக்ஸர் இறக்கிவிட்டு அவரும் ஆட்டமிழந்தார். சென்ஜோன்ஸ் 230 சொச்ச ரன்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸ் சோபை இழந்து ஆட்டம் டிரோவில் முடிந்தது. 

தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு. மத்திய கல்லூரியில் அண்டர் பிஃப்டீன் ஆட்டம் ஒன்று. பாடசாலை முடிந்து வீடு போகும்வழியில் சும்மா பார்த்துவிட்டுப் போகலாம் என்று நான், கீர்த்தி, ரங்கன் என்ற எங்கள் வழமையான குரூப் மத்திய கல்லூரி மைதானப்பக்கம் சைக்கிளை விடுகிறது. சென்ஜோன்ஸ்-சென்றல் ஆட்டம். சென்ஜோன்ஸ் துடுப்பெடுத்தாடுகிறது. அரைக்காற்சட்டை போட்டு, தைபாட் கூட வெளியே தெரியத்தக்கதாக அணிந்திருந்த பன்னிரண்டு வயதுத் தவ்வல். அவன் சூரியனைப் பார்த்து வணங்கியவாறே துடுப்பெடுத்தாட மைதானத்துக்குள் நுழைகிறான். நடையில் ஒரு கர்வம். சிங்கம்போல. பிட்ச்சுக்குள் வந்து, சோக்கட்டி எடுத்து லெக் ஸ்டம்ப் பார்த்து, நிலை எடுத்து அத்தனை பீல்டர்ஸ் பொசிஷனும் எண்ணி உறுதிப்படுத்திப் பந்தை எதிர்கொள்ளத் தயாராகிறான். வேகப்பந்து. இவன் எப்படிப் பெரியவங்கள் போடுற பந்தைச் சமாளிக்கப் போகிறான்? என்று எங்களுக்கு ஒரு அசிரத்தை. முதல் பந்து, ஷோர்ட் ஒப் லெந்தில் விழுந்த அந்தப் பந்துக்கு, இயல்பாக ஆரம்பத்தில் பாக்புட்டுக்குப் போய் பின்னர் வேகமாக புஃரொண்ட் புட்டுக்குச் சென்று எக்ஸ்ட்ரா கவரில் சடக்கென்று ஒரு டிரைவ்.

தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தை ஒரு கலக்குக் கலக்கிய, இன்றைய திகதிக்குத் தமிழர்களில் இருந்து உருவான மிகச்சிறந்த கிரிக்கட் வீரன். எந்த ஒரு சர்வதேச அணியிலும் முதல் ஆளாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கக்கூடியன். சிம்பிளாக அந்த டிரைவை அடித்துத் தன் வரவைச் சத்தம் போடாமல் அறிவித்துவிட்டு அடுத்த பந்துக்குத் தயாராகிறான். அவன் பெயர்.

.டி.கௌரிபாகன்.

 ***** 

ஒழுங்கைக் கிரிக்கட்.

பன்னிரண்டு அடி அகல, பண்டா செல்வா ஒப்பந்தம் முடிந்து மூன்றாம் நாள் போட்ட தார் ஒழுங்கை. தார் முழுதும் எடுபட்டு, சல்லிக்கல்லும் குண்டும் குழியும் மட்டுமே எஞ்சி இருக்கும். இரண்டு புறமும் மதிற் சுவர்கள். வெடித்துப்போய், கவனமில்லாமல் ஏறினாற் சரிந்து விழுந்துவிடும். அதுதான் ஒழுங்கைக் கிரவுண்ட்.

ஒழுங்கைக் கிரவுண்டின் ஒருபக்கம் யாராவது ஹிட்லர் குடும்பம் இருக்கும். இன்னொரு வீட்டில் அந்த ஏரியாவின் தேவதை, ‘றெக்கை கட்டிப் பறக்குதடா அண்ணாமலை சைக்கிள்கனவுப் பாட்டில் உங்கள் சைக்கிள் கரியரில் உட்கார்ந்துவரும் குஷ்பூ அக்கா. குஷ்பூ அக்காவை ரூட்டுப் போட ஒன்றிரண்டு ஏஎல் அண்ணாமார் அந்த ஏரியாவில் சீ-ப்ளேன் ஓட்டுவார்கள். அவளின் வீட்டில் இருப்பவருக்கு டவுட் வராமல் அவளைச் சைட் அடிப்பதற்கு அவர்களுக்கு இருந்த ஒரே வழி கிரிக்கட். ஏரியாவில் இருக்கும் சின்ன பெடியளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒழுங்கையிலேயே கிரிக்கட் ஆட்டம் ஆடுவார்கள். அவ்வப்போது சைட். அடிக்கடி அவள் வீட்டுக் கூரைக்கு மேலாகச் சிக்ஸர்கள் பறக்கும். அங்கிள் என்று கூப்பிட்டுக்கொண்டு கேற்றைத்தட்டி, உள்ளே போய்ப் பொறுக்குவார்கள். மூன்றாம் நாள் பந்து போனால் குஷ்புவின் அப்பருக்குச் சந்தேகம் வந்துவிடும். பந்தைத் திருப்பித் தரமாட்டார். திட்டி அனுப்புவார். இப்படித் தொலைந்த பந்துகளின் கணக்கே ஒரு தொகை வரும்.

ஒழுங்கைக் கிரிக்கட்டுக்கு என்று ஒன்றும் பெரிதாகச் செலவழிக்கத் தேவையில்லை. நல்ல காய்ந்த தென்னை மட்டையை அரிந்துபட்சரிக்கட்டிக் கொள்ளலாம். டெனிஸ் பந்து என்பதால் பிட்ச்சும் பெரும் சிக்கல் இல்லை. ஆனால் பந்து சல்லிக்கல்லில் பட்டு அங்கேயும் இங்கேயும் எகிறும். அதனால் பந்து வீசுபவன், தான் வசீம் அக்ரம் ரேஞ்சுக்கு ஸ்விங் பண்ணுவதாக நினைத்துக்கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால் நல்ல மொங்கான் எடுத்துப் பட்டிங் கிரீஸைச் சமப்படுத்தவேண்டும். 

விக்கட்டுக்குபைவைத்தாலே போதுமானது. ‘பைஎன்றால் வேறு ஒன்றுமில்லை. இரண்டடி இடைவெளியில் செருப்பையோ அல்லது கல்லையோ வைத்தால் அதுபை’. அதற்குள்ளால் பந்து போனால் ஆள் அவுட்.  அதிகம் உயரமாகப் போனாலோ அல்லது புஃல்லாக விழுந்தாலோ அல்லது காலில் பட்டாலோ அவுட் தரமாட்டார்கள். பட் பண்ணுபவன் அதிக வயதுக்காரன் என்றால் அவனாக விரும்பி அவுட் தந்தாலே ஒழிய வேறு எந்த வகையிலும் அவுட் கிடைக்காது. நடுவாலே உருண்டு போனாலும் அவுட் தராமல் அலாப்புவான். ஏன் மூன்று தடி நட்டு முறையான விக்கட்டில் விளையாட முடியாதா? என்று யோசிப்பீர்கள். நட்டுப்பார்த்தவனுக்குத்தான் அந்தக் கஷ்டம் தெரியும். கீப்பராக நிற்கும் நாதாறி தன்னை சுரேஷாகவோ, பீஷ்மனாகவோ நினைத்துக்கொண்டு ஸ்டம்ப் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு முறையும் விக்கட்டை தட்டி விழுத்துவான். அதற்குப்பிறகு எவ்வளவு தண்ணி ஊற்றி தடியை ஊன்றினாலும் பந்து வீசும்போது அது ஒரு பக்கம் சரிந்துவிடும். சில சமயங்களில் பந்து விழமுன்னமேயே கீப்பர் விக்கட்டைத் தட்டி அலாப்புவதும் உண்டு. இப்படிப் பல சிக்கல்களைக் கடந்துதான் ஒழுங்கை கிரிக்கட் விளையாடவேண்டும்.

டேக் கட்ச் அவுட் என்று ஒரு ரூல்ஸ் இருக்கிறது. அதாவது அடித்த பந்து எங்காவது மாமரத்திலோ, தென்னை வட்டிலோ, அல்லது வீட்டுக் கூரையிலோ பட்டு விழுந்து, உருண்டு வரும்போது பிடித்தால் அது அவுட். கூரையில் விழுந்த பந்து உருண்டு விழுவதைப் பிடிக்க ஆவென்று பார்த்துக்கொண்டு நிற்பாங்கள். தென்னை வட்டுக்குள் விழுந்ததை ஏறிப்போய் எடுத்துவிட்டு அவுட் எண்டுவாங்கள். இன்னுமொரு ரூல் லாஸ்ட் மேன் சான்ஸ். அதாவது இறுதி ஆட்டக்காரன் அவுட் ஆகுமட்டும் ஆடலாம். ரன்னர் தேவையில்லை. ஒருவரே ரன் ஓடுவார். ஆள் பற்றாக்குறையால் வந்தக் குளறுபடி இது. 

போலிங் செய்யும்போது அம்பயருக்குச் சைட் சொல்லுறதிலேயே பல தில்லுமுல்லு நடக்கும். ரவுண்ட் ஸ்டம்ப், ஓவர் ஸ்டம்ப் எல்லாம் எமக்குச் சொல்லத்தெரியாது. தெரிந்ததெல்லாம்அம்பயர் திஸ் சைட்தான். அதிலும் ஒரு பட்ஸ்மன் அவுட்டாகி அம்பயர் பட் பண்ணப் போனால் புதுசா வரும் அம்பயருக்கும் சைட் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் நோபோல் சொல்லுவான். அதே மாதிரி பலோஒன் பண்ணிப்போட்டு பிறகு ஒல்அவுட் ஆகும் நிலை வந்தால் அவன் பட் பண்ண வருவான். அது உண்மையிலேயே ரிட்டயர்ட் கேர்ட். அது எங்கே நமக்குத் தெரியப்போகுது?

ஒழுங்கை கிரிக்கட் வீரர்கள் எல்லாம் ஸ்ட்ரைட்டாக அடிப்பதில் வல்லவர்கள். எங்கள் பாஷையில் சொல்லுவதானால்இழுத்து மெயினுக்குள் அடிப்பது’. எவ்வளவு நீளமான ஒழுங்கை என்றாலும் மெயின் ரோட் காண இழுத்து அடிக்கும் திறமை ஒழுங்கை ப்ளேயர்சுக்கு  இருக்கிறது. அரைப்பிட்சில் குத்தினாலும்ஷோர்ட் ஒப் லெந்த்போட்டாலும் ரெண்டு ஸ்டெப் எடுத்தேனும் ஸ்ட்ரைட் டிரைவ்தான். இழுத்தடிப்பதற்குக்ளோஸ் டு பிட்ச்வரவேண்டும். பவுலர் என்னதான் ஸ்விங் ட்ரை பண்ணினாலும் தலைக்கு மேலால் தென்னை ஓலை எல்லாம் தடவிக்கொண்டு நேர் ஒழுங்கையில் பந்து பறக்கும். அதனால்தானோ என்னவோ கவாஸ்கரும் டோனி கிரேய்க்கும் ஸ்ட்ரைட் டிரைவ் பற்றிச் சிலாகித்தால் அட இதெல்லாம் ஒரு அடி என்று இந்தப் புளுகு புளுகிறாங்களே என்று நாங்கள் நினைப்பதுண்டு.

பந்து. 

பதினைந்து ரூபாய் முதல், டின் பந்து என்றால் இருபத்தைந்து, முப்பது ரூபாய்வரை கடையில் போகும். அதற்கும் சிலவேளைகளில் காசு இருக்காது. இதற்காகவே மட்ச்கொழுவுவார்கள். அக்கம் பக்கத்தில் உள்ள ஒரு டீமுடன் ஒரு பந்துக்கோ அல்லது ஒரு டின்னுக்கோ ஆட்டம் நடைபெறும். நன்றாக விளையாடக்கூடிய நண்பர்களின் காலைக் கையைப் பிடித்து, அவசர அவசரமாக டீம் போட்டாலும் பதினொரு பேர் தேறுவது அரிது. அதனால் கிரிக்கட் சுட்டுப்போட்டாலும் வராத ஓரிருவரைப் பிடித்து கிழங்கு ரொட்டியோ இல்லை மசாலாத் தோசையோ பேரம் பேசி அவர்களையும் சேர்த்து டீமை உருவாக்கி, ஒரு கணக்குக் கொப்பியைக் கடையில் வாங்கி, பொலித்தீன் உறை போட்டுஒருஒழுங்கை டீம்உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி எங்கள் ஒழுங்கையில் உருவாகிய அணிதான்யெலோ ஸ்டார்ஸ்அணி. ஏன் அப்படி ஒரு பெயர் வைத்தோம் என்று இன்றைக்குவரைக்கும் எனக்குக் காரணம் தெரியாது. ஒரே ஒரு சீசனில் நான்கு ஆட்டங்கள், மூன்று எவே ஒழுங்கைகள், ஒரு  ஹோம் ஒழுங்கை மட்ச். மூன்று பத்து ரூபாய் பந்துகளும் ஒரு வெள்ளைப் பந்து டின்னும் அந்த சீரிஸில் ஜெயித்திருக்கிறோம். எல்லாப் பந்துகளும் இறுதியில் அக்கம் பக்கத்து வளவுகளில் தொலைந்து போனது. 

அக்கம் பக்கம் வளவுகளுக்குள் பந்து போனால் யார் போய் எடுப்பது? என்று ஒரு முறை இருக்கிறது. அநேகமாக பட்ஸ்மன்தான் போகவேண்டும். அவன் கொஞ்சம் செல்வாக்கான ஆள் என்றால் அடிப்பொடிகளை அனுப்புவான். பந்து மூன்று தடவைகளுக்கு மேல் வளவுகளுக்குள் போய் விழுந்தால் அடித்தவர் அவுட். குஷ்பூ வீட்டில் பந்துபோய் விழுந்தால் ஆளாளுக்குப் போட்டி போட்டு மதில் தாண்டுவார்கள். இதுவே ஹிட்லர் வீடென்றால் ஐஞ்சாம் வகுப்பு பெடியன் ஒருவனை ஏத்தி அனுப்புவோம்.  ஹிட்லரின் வீடுகளில் இருக்கும் பொதுவான விசயம், ஹிட்லரின் மனைவி நல்லதனமாக இருப்பார். ‘பெடியங்கள் எண்டால் விளையாடத்தானே வேணும்என்று ஹிட்லருக்கு தெரியாமல் வளவுக்குள் விழுந்த பந்தை எடுத்துத் திருப்பி எறிவார். 

இன்னொரு சர்வதேசப் பிரச்சனை ஒழுங்கை கிரிக்கட்டில் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் அநேகமாக பின் வளவுகளில் கக்கூசைத் தனியாகத்தான் கட்டுவார்கள். அதுவும் காற்று வரட்டும் என்று யன்னல் ஓட்டையை வேறு பெரிதாக வைப்பார்கள். எங்கள் கஷ்டகாலம், நாங்கள் அடிப்பது நேரே அந்த யன்னல் ஓட்டையால் உள்ளே போய் விழும். உள்ளே ஆள் இருந்தால் அதுவும் பொம்பிளையாக இருந்தால் கதை கம்மாஸ். வேண்டுமென்றே அடித்தோம் என்று பிரச்சனையாகும். ஆளே இல்லாவிட்டால்கூடப் பிரச்சனைதான். கக்கூஸ் பவுல் ஓட்டைக்குள் பந்து விழுந்துவிடும். அதை எடுப்பது யார்? என்பது சர்ச்சையாகும். அநியாயத்துக்கு அத்தனை பேரும் பிகு பண்ணுவாங்கள். பின்னர் சொப்பிங் பாக் ஒன்றால் பந்தைப் பிடித்து, லைவ்போய் போட்டுக் கழுவி என்று அது ஒரு கறுமம் பிடிச்ச வேலை. பந்து கிணற்றுக்குள் விழுந்தாலும் பிரச்சனைதான். வாளியைத் துலாவித் துலாவி லபக் என்று பிடிக்கவேண்டும். இப்படிப் பல நடைமுறை நாளாந்தப் பிரச்சனைகளை கடந்துதான் ஒழுங்கை கிரிக்கட் விளையாட வேண்டும். 

விளையாடினோம்.

 ***** 

பன்னிரண்டு வயதில் கௌரிபாகன் அண்டர் பிஃப்டீன் விளையாடியது ஊர் முழுக்கச் செய்தியானது. ஒரே நாளில் கௌரி பாடசாலையின் ஹீரோ ஆனான். கௌரி எங்கள் வகுப்பு என்பது நம் எல்லோருக்கும் பெருமையே. சில நேரங்களில் பொறாமையும் வரும். அழகான பெண்கள் எல்லாம் அவன் பில்டர் பண்ணி முடித்த பிறகே நம் செலக்சனுக்கு வரும். அதை விடச் சோகம் அவனுக்கும் நமக்கும் இடையில் இன்னும் பல ஹூரோக்கள் இருந்து தொலைத்ததுதான். நம் தவணை வரும்போது தாவணி வரிசை எம்டி ஆகிவிடும். இது போதாதென்று ஒருவருடம் கழித்து, தொண்ணூற்று மூன்றாம் ஆண்டு யாழ் இந்துவில் கார்த்திக் என்ற இன்னொரு ஹீரோ உருவாகிறான். அவனுக்கும் நம் வயசுதான். அவன் யாழ் இந்துவில் அண்டர் பிப்டீன் விளையாடிக் கலக்க ஆரம்பிக்க, கௌரியா? கார்த்திக்கா? என்ற போட்டி டியூசன் வகுப்புகளில் மாணவர்களிடையே ரஜனி-கமல் ரேஞ்சுக்கு அப்போது இருந்தது.

தொண்ணூற்று மூன்றாம் ஆண்டு சென்றல்-சென்ஜோன்ஸ் பிக் மட்ச். பீஷ்மன் அண்ணா சென்ஜோன்சுக்கு கப்டின். யோகதாஸ், கேர்ஷன் என சீனியர் ப்ளேயர்கள் எல்லாம் இப்போது அணியில் இல்லை. ஏற்கனவே லீக்கில் ஒரு ஆட்டம் தோற்றதாகவும் ஞாபகம். ஆக பிக் மட்ச் நெருங்க, நெருங்க எங்களுக்குள் சின்னப் பதட்டம் தொற்றிக்கொண்டது. ஆகாஷ், லட்டு என்று பழைய வீரர்கள் இன்னமும் சென்றலில் இருக்கிறார்கள். மத்திய கல்லூரி கிரிக்கட்டில் ஒரு ஆச்சரியமான விசயம். சீசன் பூராகப் பிரகாசிக்காமல் இருந்துவிட்டுப் பிக் மட்சில் மட்டும் ஒருத்தன் திடீரென்று விஸ்வரூபம் எடுப்பான். தொண்ணூற்று இரண்டில் அது லட்டு என்றால் இந்த வருடம் அது சுரேஷ். மட்ச் ஓரளவுக்கு எங்கள் கொன்றோலில் இருக்கிறது என்று நினைத்த நேரத்தில் சுரேஷ் ஒரு செஞ்சரியைப் போட நம்ம நிலைமை படு சோகம். இரண்டாவது இன்னிங்ஸில் எண்பத்தாறு ரன்னுக்கு எட்டு விக்கட்டுகள் போய்விட்டன. முழுநேர செஷன் மிச்சம் இருக்கிறது. வெற்றி நிச்சயம் என்று மத்திய கல்லூரி ரசிகர்கள் பக்கம் விசில் பறக்கிறது. நல்லதண்ணியில்இருந்த ஒருசில சென்ஜோன்ஸ் ரசிகர்கள்போனால் போகட்டும் போடாபாட்டை எண்ணெய் பரலில் தாளம் தட்டிப் பாடவும் தொடங்கிவிட்டனர். 

அப்போதுதான் அந்த அதிசயம் இடம்பெற்றது. 

சஞ்சீவ், சிறிதரன் என்ற இரண்டு பேரையும் அதற்கு முதல் பெரிதாக எங்களுக்குத் தெரியாது. அண்டர் செவென்டீன் விளையாடியவர்கள். ஒன்பதாவது, பத்தாவது ஆட்டக்காரர்களாகக் களம் இறங்குவார்கள். இவர்களில் வேலையில்லை, சென்ஜோன்ஸ் கதை முடிந்தது, நாங்கள் எல்லாம் முக்காடு போட்டுக்கொண்டு நடையை கட்டுவோம் என்று நாம் நினைக்க, அவர்கள் இருவரும் வேறு மாதிரி நினைத்திருக்கவேண்டும். படுத்துவிட்டார்கள். போடும் பந்து எல்லாவற்றையும் ஒரே நொட்டுத்தான். கவாஸ்கர், ரவிசாஸ்திரி, மஞ்சேர்கர் எல்லாம் தோற்றார்கள். ஸ்பின்னாக இருக்கட்டும், ஸ்பீடாக இருக்கட்டும், பவுன்ஸ், ஜோக்கர் எதுவென்றாலும் புளொக்தான். பசையல் என்றால் அப்படி ஒரு பசையல். ‘சென்ஜோன்ஸ்காரங்கள் பாய் போட்டுப் படுத்திட்டாங்கள்என்று சென்றல் பக்கமிருந்து கூச்சலோ கூச்சல். இடையிடையே இரண்டு ஓவருக்கு ஒருமுறை நேரம் கடத்தத் தண்ணீர் வரவைப்பார்கள். அம்பயர் துரத்தும் மட்டும் தண்ணீர் குடித்துக்கொண்டு இருப்பார்கள். திடீரென்று பாட் கழட்டி மாற்றுவார்கள். பட் மாற்றுவார்கள். நேரத்தைப் போக்காட்ட இல்லாத திகிடுத்தாளம் எல்லாம் செய்து, இறுதியில் ஆற்றாமையால் விக்கட் கீப்பர் சுரேஷ் கூடப் பந்து வீசிப்பார்த்தார். ம்ஹூம் எதற்கும் அசையக் காணோம். இறுதியில் இருவருமே தலா ஐம்பது அடித்து மட்சை ட்ரோவில் முடிக்கும் மட்டும் நாங்கள் எவருமே இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. சுண்டு விரலகூட அசைக்கவில்லை. இடையில் பாத்ரூம் வேறு வந்தது. நோ வே. எங்கே அசைந்தால் விக்கட் போய்விடுமோ என்ற பயம். அப்படி ஒரு ஆட்டம் அது.

அந்தப் பருப்பு அடுத்த வருடம் வேகவில்லை.

தொண்ணூற்று நான்காம் ஆண்டு சஞ்சீவ் அண்ணா கப்டின். சென்ஜோன்ஸ் லீக் சுற்றில் நன்றாகச் செய்தாலும் பிக் மட்ச்சில் கோட்டை விட்டு இலகுவாக சென்றலிடம் தோற்றுவிட்டோம். ஆனால் கௌரியின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. பதினாலு வயதிலேயே பிக் மாட்ச் விளையாடினான். ஒன்பதாவது ஆட்டக்காரனாக ஆக இறங்கி சிக்ஸர் பவுண்டரி என விளாசித்தள்ளி 39 ரன்ஸ் அடித்துத் தோல்வியை ஒத்திப்போட்டான். 

தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு எமக்கு பதினைந்து வயது ஆகிறது. பதினைந்து வயதில்  கௌரி இப்போது சீனியர் ப்ளேயர். ஓபனிங் பட்ஸ்மென் மற்றும் விக்கட் கீப்பர். பிக் மட்சில் பெரிதாக  பிரகாசிக்கவில்லை.  நிரோஷன் அண்ணா, என் மாமாவின் மகன், அவருக்கு வெயிலில் நின்றால் ஒரு புதுவகை அலர்ஜி நோய் வந்துவிடும். உடம்பெல்லாம் தடித்துவிடும். பிக் மட்சுக்கு முதல் வாரம் இந்த அலர்ஜி வந்துவிடவே மாமா வீட்டில் ஒரே பதட்டம். விளையாட அனுமதிப்பதா? இல்லையா? முதல்நாள் வருத்தம் மாறிவிடுகிறது.

பிக் மட்ச் முதல் இன்னிங்ஸில் 48 ரன்களில் நிரோஷன் அண்ணா ஆட்டம் இழந்தபோது முகம் தொங்கிப்போய்விட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் வட்டியும் முதலுமாகச் சேர்த்து அடித்து நொறுக்கி செஞ்சரி போட்டு ஒரு கலக்கு கலக்கினார். அந்த ஆட்டம் ட்ரோவில் முடிந்தாலும் இத்தனை வருட ஆட்டங்களில் சென்ஜோன்சின் கை ஓங்கியிருந்த முதல் பிக் மட்ச் அதுதான் என்பது முக்கியமானது. ஆட்டநாயகனுக்கு லுமாலா சைக்கிள் எல்லாம் பரிசாக கொடுத்தார்கள். 

 *****

யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு  இடம்பெயர்ந்த தொண்ணூற்றைந்து, தொண்ணூற்றாறு காலப்பகுதிகளில் விளையாட்டுச் செயற்பாடுகள் ஸ்தம்பித்துப்போய் தொண்ணூற்றேழில் மீண்டும் துளிர்விட்டது. இந்தக் காலப்பகுதியில்தான் கௌரி என்கின்ற ஆட்டக்காரனின் மொத்த உருவம் யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும், குறிப்பாகக் கொழும்பிலும் பரவத்தொடங்கியது. தொண்ணூற்றேழாம் ஆண்டு, அவனின் பதினேழு வயதிலேயே அவன் சென்ஜோன்ஸ் அணிக்குக் கப்டினாகி விட்டான்.

அது ஒரு பாடசாலை நாள். கெமிஸ்ட்ரி கிளாஸ். பி. எஸ் சேர் வகுப்பு. பி. எஸ் ஐந்து நிமிடத்துகொருமுறை மீசையைச் சொறிந்துகொண்டே கேள்வி கேட்பார். கரும்பலகையில் ஏதாவது எழுதிக்கொண்டிருப்பார். திடீரென்று நிறுத்திவிட்டு மீசையைச் சொறிந்துகொண்டே திரும்பி எம்மைப்பார்த்து கேள்வி கேட்பார். எவனுமே ரியாக்ட் பண்ணாவிட்டால் மீண்டும் எழுதப் போய்விடுவார். சிலநேரங்களில் ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று எம்மை அழவைத்து, தான் மட்டும் சிரிப்பார். டவுட்டுக்குப் பேர்போன அப்பாஸ் ஏதாவது இன்னோர்கானிக்கில் கேள்விகேட்டுக் குழப்பிவிட்டால் இன்னமும் வேகமாக மீசையைச் சொறிவார். அன்றைக்கும் சேர் அடிக்கடி மீசையைச் சொறிந்துகொண்டு இருந்தார். ஆனால் டென்சனுக்குக் காரணம் கெமிஸ்ட்ரி பாடம் அல்ல. 

அன்றைக்குத்தான் அண்டர் செவென்டீன் செமி பைனல் மட்ச். நடப்பது கொக்குவில் இந்து மைதானத்தில். கொக்குவில் இந்து ஏற்கனவே பட் பண்ணி ஆட்டமிழந்துவிட்டது. சென்ஜோன்ஸ் பட்டிங். கட கடவென்று முதலிரு விக்கட்டுகளும் விழுந்துவிட்டன. சென்ஜோன்ஸில் இருந்த தொலைப்பேசிக்கு எடுத்து யாரோ அவ்வப்போது ஸ்கோர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

பாடசாலை முழுதும் ஒருவித டென்சன் பரவத் தொடங்கியிருந்தது. 

கௌரி கிரீஸில் நிற்கிறான் என்ற தகவல் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை தெரியவருகிறது. பத்து, இருபது, முப்பது என்று வந்துகொண்டிருந்த ஸ்கோர் திடீரென்று ஐம்பது, நூறு என்று எகிறுகிறது. வகுப்பில் இருப்புக்கொள்ள முடியவில்லை. பெரும் பார்ட்னர்ஷிப் ஒன்று, கௌரி பிட்சில் நின்று சதிராடுகிறான் என்ற நியூஸ் பள்ளிக்கூடம் முழுதும் பரவிவிட்டது. இன்டர்வல் டைமில் கன்டீனிலும் இதுதான் கதை. ஆனால் போய்ப்பார்க்க முடியாது. மதில் பாய்ந்து போகலாம் என்றால் அடுத்த நாள் தனபாலன் பிரின்சிபலிடம்பின்னாலேவாங்க வேண்டிவரும். எங்களை விட பி.எஸ்தான் கடும் டென்சனில் இருந்தார். ‘ப்ச் ... பார்க்கேலாம இருக்கே ... என்னமா அடிப்பான் தெரியுமாஎன்று பி.எஸ் தான் சின்னவயதில் பார்த்த கிரிக்கட் கதை எல்லாம் சொல்லத் தொடங்கியிருந்தார்.

அன்றைய கௌரியின் இன்னிங்ஸ்; என் அறிவுக்கெட்டியவரையில் அதுதான் யாழ்ப்பாண வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்க்ஸ். கொக்குவில் இந்து மைதானம் மிகச்சிறிய மைதானமாகவே இருக்கட்டும். ஆனால் ஒருத்தனால் பதினெட்டு சிக்ஸர்கள் அடிக்கமுடியுமா? ஆம். பதினெட்டு சிக்ஸர்கள். பதினெட்டு பவுண்டரிகள். மொத்தமாக 236 ரன்கள். ஒரே நாளில் முழங்கியிருக்கிறான்.  இத்தனைக்கும் கௌரி ஒன்றும் வெறும் ஸ்லோக்கரோ மோட்டு அடிகாரனோ கிடையாது. அவன் ஒரு பூரணமான கிளாசிக் துடுப்பாளன். அவன் ஆட்டத்தில் அட்டாக், டிபென்ஸ் என்று இரண்டுமே சரிவரக் கலந்திருக்கும். கௌரி மிக வேகமான புட்வேர்க் கொண்ட டெக்னிகலி கரக்ட் பிளேயர். அதுவும் புறொன்ட் புட் அவனுக்குப் பயங்கர ஸ்ட்ரோங். ஹூக்கிங் கூட ஸ்ட்ரோங். நான் அறிந்து அவனுக்கு ஏதும் வீக் லிங்க் இருந்ததாகத் தெரியவில்லை. இருந்திருந்தாலும் எந்தப் பந்துவீச்சாளராலும் அதை அறியமுடியவில்லை. அவனாக ஆட்டமிழந்தாலே ஒழிய அவனைப் ப்ளான் பண்ணி அவுட்டாக்க முடியாது. அப்படி ஒரு ப்ளேயர் ஆடிய பெஸ்ட் இன்னிங்ஸைக் காணும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை. ஆனால் அன்றைய ஆட்டத்தில் கௌரியோடு மிக நீண்ட பார்ட்னர்ஷிப் போட்ட என்னுடைய நெருங்கிய நண்பனான தினேஷ் எபநேசர் அதை எப்படி விவரிக்கிறான் என்று பார்ப்போம்.

It was the semi finals of the U – 17 district tournament @ Kokuvil Hindu College grounds. The ground was packed with the Kokuvil Hidu students, and we could hardly see a Johnian as it was a school day. 

We lost two wickets for one run, and I joined him in the second over. The cheer was on top and the crowd was right behind our opponents. We discussed and the plan was not to lose a wicket and score about 75 together initially. The plan was executed and both rotated the strike without taking many risks. We were together on 35 each if my memory serves right. Then Gowri told me to anchor the innings and he’ll take calculated risks and consolidate the score. As a captain, he was prepared to lead from the front.

The fireworks started from then on. He reached his 50 in 3 overs from then. Each over there was a boundary scored. The opposition captain couldn’t do anything. He was clueless and mesmerized. Still we rotated the strike and I took singles and provided Gowri majority of the strike. 

He reached his 100 in style with a six over extra cover. About three overs later I was bowled for 78. This included 12 boundaries. The team score was 241, where the 3rd wicket partnership was 235 runs – an unbroken record still I guess. 

From there on, Gowri accelerated further and hammered the bowlers all over the park. He played all the shots in the book and the spectators were thrilled. Covers, extra covers, long on, long off, mid wicket and square leg…. No one could stop him that day. He hardly put a foot wrong. 

He blazed away to 200 in no time and probably a record score then, and finally dismissed for 236. He hit 18 sixes and 18 fours. This took him to the peak of his popularity I could say. When he got out and walked back to the dressing room, the whole ground stood up and applauded. This is the first time I have ever seen a school boy getting such an honour. 

Further, he followed it up with the match wining 65 in the finals as we emerged champions in that season.

இதை எழுதிய தினேஷ் பின்னாளில் சென்ஜோன்ஸ் அணிக்குக் கப்டினாக இருந்து, கொழும்பு பல்கலைக்கழகத்து அணிக்கும் விளையாடி, சில வெளிநாட்டுச் சுற்றுலா அணிகளிலும் இடம்பிடித்தவன். திறமைசாலி. அந்த பார்ட்னர்ஷிப் அனுபவத்தைச் ஷேர் பண்ணமுடியுமா என்று கேட்டேன். தயக்கமே இல்லாமல் உடனடியாகவே எழுதி அனுப்பினான். 

தாங்க்ஸ் டினேஷ்.

கௌரி இப்படி ஆடிக்கொண்டிருக்க யாழ் இந்துவின் கார்த்திக்கும் அட்டகாசமான இன்னிங்ஸுகளை ஆடிக்கொண்டிருந்தான். முதல் முறை யாழ் மாவட்ட அணி தெற்குக்கு விஜயம் செய்தபோது பாடசாலை அணிகளில் இருந்து கௌரியும் கார்த்திக்கும் மட்டுமே தெரிவு செய்யப்பட்டார்கள். ஏனைய ஒன்பது பெரும் பிரபல அனுபவ சீனியர் வீரர்கள்.  ஆனால் இவர்கள் எவருக்குமே டேர்ஃப் களத்தில் விளையாடிய அனுபவம் இல்லை. அந்த அனுபவம் இல்லாமலேயே கௌரியும் கார்த்திக்கும் கொழும்பை ஒரு கலக்குக் கலக்கினார்கள். இருவரும் ஓபனிங்காக இறங்கி ஐம்பது, நூறு என்று அடித்துவிட்டு ஆட்டமிழந்தால் அப்புறம் யாழ் மாவட்ட அணி சச்சின் ஆட்டமிழந்த பின்னரான இந்திய அணிபோல ஆகிவிடும். எல்லோருமே கடமைக்கு சைன் வைக்கப்போவதுபோல் போய்விட்டுப் போன வேகத்தில் ஆட்டமிழந்து திரும்புவார்கள். அப்போதுதான் கௌரியும் கார்த்திக்கும் எப்படிப்பட்ட வீரர்கள் என்று மொத்த யாழ் மாவட்டத்துக்குமே புரிந்தது. 

இப்படி யாழ்ப்பாணக் கிரிக்கட் என்பது மிக நீண்ட நெடிய கதை. தொண்ணூற்றெட்டாம் ஆண்டு பிக் மட்சில் செகண்ட் இன்னிங்ஸில் கௌரியின் ஆட்டம், 99ம் ஆண்டு பிக் மட்சில் கௌரி-பிரகாஷன் ஜோடி கலக்கிய கலக்கல், திடீரென்று கேதீஸ் அடித்த செஞ்சரி என்று இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம். 

எதை எடுக்க எதை விட?

 *****

சிலநேரங்களில் இந்த வீரர்கள் எல்லாம் பின்னாளில் என்ன ஆனார்கள்? என்று நினைக்கும்போது சின்னதான அயர்ச்சி வருகிறது. கிரிக்கட் இவர்களுக்குச் சோறு போடவில்லை. சின்ன டீ கூடக் கொடுக்கவில்லை. அதுதான் யாழ்ப்பாணத்தின் நிலைமை. காண்டீபன் அண்ணா பாடசாலை முடிந்து கொஞ்சக்காலமாகக் கிளப் அணிகளுக்கு விளையாடியவர், பின்னர் கிரிக்கட்டுக்கு மொத்தமாகவே முழுக்குப் போட்டுவிட்டார். கௌரிக்கு இப்போது முப்பத்துநான்கு வயது, அவன் லெவலுக்கு அவனுக்கென்று ஒரு அணி இருந்திருக்குமேயானால் சர்வதேசக் கிரிக்கட்டில் உச்சத்தில் இருக்கும் வயசு. ஒரு அணிக்குத் தலைமை தாங்கும் வயசு. என்ன செய்கிறான்? கிரிக்கட்டைச் சுத்தமாகக் கைவிட்டுவிட்டான். தன் படிப்பு கெட்டது கிரிக்கட்டால் என்று புலம்பியவன், இரண்டாவது தடவையில் மெடிசின் எண்டர் பண்ணி, இன்றைக்கு வைத்தியராகப் பணி புரிகிறான். எம். எஸ் செய்கிறான் என்றும் கேள்வி. கார்த்திக் கொஞ்சநாள் இங்கிலாந்து அணி ஒன்றில் விளையாடியவன் பின்னர் யாழ்ப்பாணத்தில் விளையாடி, இப்போது ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கிறான். சம்மர் என்றால் கிரிக்கட் விளையாடுகிறான். பொழுதுபோக்குக்காக. பீஷ்மன், லட்டு, சுரேஷ் அண்ணாமார் எல்லோரும்அந்த நாள் ஞாபகம்பாடும் நிலைதான். ஏன் இப்படி? என்ற ஒரு சலிப்பு வருவது இயல்பாகிறது. சில நாடுகளின் வீரர்கள் ஆடும் ஆட்டத்தைப் பார்க்கும்போது கோபம் இன்னமும் எகிறுகிறது. இது காண்டி அண்ணாவின் இடம், டூ டவுனாக வரவேண்டியவன் கௌரி, இந்தப் பார்ட்னர்ஷிப் போட்டிருக்க வேண்டியவர்கள் கௌரியும் கார்த்திக்கும் என்றெல்லாம் ஒவ்வொரு தடவையும் சில சர்வதேச ஆட்டங்களைப் பார்க்கும்போது ஆதங்கம் ஏற்படுகிறது. கூடவே அடிமனதில் இருந்தக் கனவுகளும் எகிற, கோபம் இன்னமும் அதிகரிக்கிறது. இது சிறுபிள்ளைத்தனமானச் சிந்தனை என்று ஒரு புதுத்தலைமுறை சொல்லிவிடலாம். எம்மால் அது முடியாது. இதுதான் எங்களின் அணிகள். இவர்கள்தான் நாங்கள் கொண்டாடிய வீரர்கள். இதுதான் எங்கள் கிரிக்கட். கிரிக்கட் ஒரு விளையாட்டாய், கிரிக்கட் ஒரு அரசியலாய் .. இதெல்லாமே தாண்டிஎன் கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ இதுவே நாம்என்கின்ற கேதாவின் கவிதைபோல, இந்தக் கிரிக்கட் ஒரு தசாப்தத்தின் வாழ்க்கை. எங்களின் வாழ்க்கை. 

இதுவே நாம்.

இரண்டாயிரத்தொராம் ஆண்டுக்குப் பிறகு பிக் மட்ச் மற்றும் உள்ளூர் ஆட்டங்களில் இருந்த ஆர்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கத் தொடங்கியது. ஒருவேளை எனக்குள் இருந்த ஐஸ்பழம் வாங்கிச் சூப்பிக்கொண்டே யாழ் இந்து மைதானச் சுவரில் சாய்ந்துகொண்டு மட்ச் பார்க்கும் சிறுவன் தொலைந்து போயிருக்கலாம். அல்லது நான் பார்த்து வளர்ந்த யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்துபோய் தெற்கிலிருந்து புதுவித யாழ்ப்பாணம் இறக்குமதியாகியிருந்தது காரணமாக இருக்கலாம். தெரியவில்லை. கடந்தமுறை லீவில் ஊருக்குச் சென்றபோது சென்றல்-சென்ஜோன்ஸ் அண்டர் செவெண்டீன் ஆட்டம் ஒன்று. சிவலக்சன் என்று எனக்குத் தெரிந்த தம்பி ஒருத்தன்அண்ணே நானும் விளையாடுறன். டைம் இருந்தாப் பார்க்க வாங்கோஎன்றான். நானும் சந்தோசத்தில் சிவப்பு டீஷர்ட் எல்லாம் போட்டு ஜோனியன்ஸ் கலர்ஸ் காட்டவேண்டும் என்பதற்காகச் சண் கிளாசஸ் அடித்துக்கொண்டு, அந்த வெக்கைக்குள்ளும் அடிடாஸ் சப்பாத்து போட்டுக்கொண்டு கிளம்பிப்போனேன். மைதானத்துக்குள் போனால் ஒன்றிரண்டு ஸ்ரீலங்கா பொலிஸ்காரர்கள். தூரத்தில் பார்த்தவுடனேயே அடிவயிற்றில் ஒரு நடுக்கம். அந்தப்பக்கம் திரும்பியே பார்க்காமல் மேலே சென்றால் தூரத்தில் தக தகவென யாழ் நூலகம் என்னைப் பார்த்துச் சிரித்தது. திருத்தப்பட்ட மணிக்கூட்டு கோபுரம், சோலையாய் சுப்ரமணிய பூங்கா. அந்த வெயிலுக்கு குளிர்ச்சியை தந்திருக்கவேண்டும். ஏனோ எரிந்தது. 

மைதானத்துக்குள் எந்த அழுக்கும் இல்லாமல் ஜேர்சி அணிந்த வீரர்கள். ஒரு சில கட்டாக்காலி நாய்கள். ஆங்காங்கே விளம்பரப் பதாகைகள். மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு, ஒரு வில்வ மரத்தடியில் நின்று கிரிக்கட் பார்த்த வயோதிபரிடம் கதை குடுத்தேன். அவராவது மட்ச் பார்க்க வந்திருக்கிறாரே.

ஐயா மட்ச் என்ன சொல்லுது? இந்தப் பசை பசையிறாங்கள்?
என்ன மயிரோ தம்பி... நான் போலிஸ் ஸ்டேசன்ல ஒரு முறைப்பாடு  போட வந்தனான் ... அறுவான் . . ஸி சாப்பிடப் போயிட்டான்அதான் இதில வந்து நிண்டு நேரம் கடத்துறன்

அதற்கு மேல் அவரோடு கதை கொடுத்தால் கந்தலாகிவிடும் என்ற பயத்தில் மைதானத்தை ஒரு ரவுண்ட் அடித்தேன். பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவர்கள் எல்லோரும் சுப்பிரமணிய பூங்காவில். இந்தப்பக்கம் மட்ச் நடக்கத்தக்கதாக எப்படி அவர்களால் பூங்காவுக்குள் இருந்து விளையாட முடிகிறது? மத்திய கல்லூரி மைதானத்தில் சுடுமணலின் மேல் செருப்பை வைத்து அதற்கு மேல் இருந்து மட்ச் பார்க்கும் சிறுவனைக் காணவில்லை. கரியரில் டியூசன் கொப்பி இருக்க, வகுப்பைக்கட்பண்ணிவிட்டு நேரத்தைப் பதட்டத்தோடு கவனித்தபடி, களவாக மட்ச் பார்க்கும் சிறுவனையும் காணவில்லை. ஆட்டம் தன்பாட்டுக்கு நடக்க மூலையில் இருக்கும் பாழடைந்த பாஸ்கட்போல் திடலில் ஆளுக்கு இரண்டு ஓவர் என்று விளையாடும் சிப் அறுந்த, பட்டன் உடைந்த, ஹேர்பின் குத்திய காற்சட்டைச் சிறுவர்களையும் காணவில்லை. கறல் பிடித்த ஒரு தகரத்தை நடுவெயிலில் இருந்து தடக்கு, தடக்கு என்று தட்டியபடியே கொலிஜ், கொலிஜ் என்று கத்தும் சிறுவர்களையும்

தொலைத்துவிட்டோம்.

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .